காபூலின் விமான நிலையத்தைக் குறிவைத்து எறிபடை (ராக்கெட்) தாக்குதல்கள் நேற்று நடத்தப்பட்டன. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் விரைந்து வெளியேறி வருகின்றன. 'ஐஎஸ்' அமைப்பின் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியவர்களையும் துருப்புகள் வெளியேற்ற உதவி வருகின்றன. இதற்கிடையே, இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஆப்கானிஸ்தானை விட்டு அனைத்து அமெரிக்கத் துருப்புகளையும் மீட்பதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்துள்ள இறுதி நாள் இன்று. தலிபான் இயக்கம் மீண்டும் ஆட்சியை இரு வாரங்களுக்கு முன்னர் கைப்பற்றியதை அடுத்து, ஆப்கான் மக்கள் பீதியில் அமெரிக்க விமானங்கள் வழி நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர்.
காபூல் விமான நிலையத்திலிருந்து 120,000க்கும் மேற்பட்டோரை வெளியேற்ற உதவி வரும் இந்த விமானச் சேவைகள் இன்றோடு முடிந்துவிடும். அதற்குள் எஞ்சிய அமெரிக்கத் துருப்புகளும் கிளம்பிவிட வேண்டும் என்பது இலக்கு. இந்நிலையில் தங்களையும் அமெரிக்க அரசத்தந்திரிகளையும் வெளியேற்றுவதில் தற்போது அமெரிக்கத் துருப்புகள் கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கிடையே மீட்கும் பணிக்கு ஆகப் பெரிய மிரட்டலை, தலிபானுக்கு எதிராக இயங்கி வரும் 'ஐஎஸ்' அமைப்பு விடுத்து வருகிறது.
மேலும் அதிக தாக்குதல்கள் தொடரக்கூடும் என்று திரு பைடன் எச்சரித்ததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு 'ஐஎஸ்' அமைப்பால் தயாரிக்கப்பட்ட கார் வெடிகுண்டு மீது அமெரிக்கா, விமானத் தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதை அடுத்து, நேற்று காலை விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. விமான நிலையத்தைக் குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்க அதிபர் மாளிகை பின்னர் உறுதிப்படுத்தியது. இருப்பினும், அங்குள்ள செயல்பாடுகள் எதுவும் தடைப்படவில்லை என்றும் அது தெரிவித்தது.
ஐந்து முறையாவது ராக்கெட் தாக்குதல் நடந்திருக்கும் என்று தாம் நம்புவதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், அனைத்தையும் விமான நிலையத்தின் எரிபடைத் தற்காப்பு அமைப்புமுறை முறியடித்துவிட்டதாகக் கூறப்பட்டது.