இலங்கை அரசாங்கம் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்டு அவசரநிலையை அறிவித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவதால் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான நிதி உதவியை தனியார் வங்கிகளால் செய்ய இயலவில்லை.
கடுமையான பொருளியல் நெருக்கடியை நாடு சந்தித்து வருவதால் உணவுப்பொருள்களைப் பதுக்குவதைத் தடுப்பதற்கான அவசரநிலை விதிமுறைகளை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அறிவித்தார்.
குறிப்பாக, அரிசி, சர்க்கரை மற்றும் பல அத்தியாவசிய உணவுப்பொருள்களை பதுக்குவதற்கு எதிரான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
அதேநேரம் நெல், அரிசி, சர்க்கரை மற்றும் இதர பயனீட்டாளர் பொருள்களின் விநியோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க உயர்நிலை ராணுவ அதிகாரி ஒருவரை அத்தியாவசியச் சேவைகளின் தலைமை ஆணையராக அதிபர் பெயர் குறிப்பிட்டார்.
அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களின் விலை அதிகமாக ஏறிவிட்டன. மேலும், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், பால் மாவு போன்ற பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுபோன்ற காரணங்களைத் தொடர்ந்து அரசாங்கம் அவ சரநிலையை அறிவிக்கும் முடிவை எடுத்தது. உணவுப் பொருள்களைப் பதுக்குவோருக்கு எதிரான தண்டனையையும் அரசாங்கம் அதிகரித்துள்ளது. சுமார் 21 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரின் உயிரை கொவிட்-19 கொள்ளைநோய் பறித்துவிட்டது.
மேலும், கடந்த ஆண்டு மார்ச் முதல் இலங்கையின் பொருளியல் 3.6 விழுக்காடு சுருங்கிவிட்டது. அந்நியச் செலாவணி கையிருப்பைப் பத்திரப்படுத்தும் நோக்கில் வாகனங்களை இறக்குமதி செய்யவும் தாவர எண்ணெய் போன்ற இதர பொருள்களையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.
உணவுப்பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் இறக்குமதி செய்யத் தடை இல்லை என்ற
போதிலும் அவற்றை வாங்க போது மான அமெரிக்க டாலர் கிடைக்காமல் இறக்குமதியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
உள்ளூர் நாணயத்தின் வெளிப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி இரு வாரங்களுக்கு முன்னர் வட்டி விகிதங்களைக் கூட்டியது.
இதற்கிடையே, இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தியாவசிய மருந்துப் பொருள்
களையும் கொவிட்-19 தடுப்பூசி
களையும் வாங்க அந்நியச் செலாவணி பயன்படுத்தப்பட இருப்பதால் எரிபொருளை சிக்கனமாகப் பயன்
படுத்துமாறு வாகனமோட்டிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம் எரிபொருள் பயன்பாடு குறையாதபட்சத்தில் ஆண்டிறுதிக்குள் எரிபொருளுக்கான பங்கீட்டுமுறை அறிமுகம் செய்யப்படலாம் என அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.

