மலேசியாவுக்குள் வருவோரது கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிச் சான்றிதழ்கள், சுகாதார அதிகாரிகளால் சரிபார்க்கப்படும் என்று அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் ஆதம் பாபா நேற்று கூறினார்.
பயணிகள் மட்டுமன்றி மலேசியர்களும் சரிபார்ப்பதற்குத் தங்களின் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றார் அவர்.
"சிங்கப்பூர் போன்ற மற்ற நாடுகளில் தங்களின் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட மலேசியர்கள், தங்களுக்கு மிக அருகில் இருக்கும் வட்டார சுகாதார அலுவலகத்திற்குச் சென்று, வெளிநாட்டில் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளப்பட்டதைத் தெரிவிக்க வேண்டும்," என்றார் திரு ஆதம்.
வெளிநாடுகள் வழங்கியுள்ள கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களைச் சரிபார்க்கும் மாநில சுகாதாரப் பிரிவுக்கு அலுவலகம் பின்னர் அந்தத் தகவலைத் தெரிவித்திடும்.
அதையடுத்து, நெருக்கடிக்கால தயார்நிலை மற்றும் செயல்பாட்டு நிலையத்திற்கு (சிபிஆர்சி) அத்தகவல் தெரிவிக்கப்படும். பின்னர், சிபிஆர்சி 'மைசெஜாத்ரா' செயலி மூலம் மலேசியச் சான்றிதழ் ஒன்றை வழங்கும்.
'மைசெஜாத்ரா' செயலியின் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு வெளிநாட்டு கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழை அடையாளம் காணும் அம்சமும் அதில் அடங்கும். தொடர்புகளின் தடமறியும் நடைமுறையை மேலும் எளிதாக்க, ஓர் இடத்தை விட்டு வெளியேறும்போது செயலியில் அதைப் பதிவு செய்யும் அம்சமும் அறிமுகம் கண்டுள்ளது.
"மலேசியர்களோ வெளிநாட்டவரோ, வெளிநாட்டில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிச் சான்றிதழ் போலியானது அல்ல என்பதை உறுதிப்படுத்துவதே முக்கியமானது," என்றார் டாக்டர் ஆதம்.
அத்துடன் அவர்களுக்குக் கிடைத்த தடுப்பூசி வகைகளை அறிந்துகொள்ளவும் இது உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது.
மலேசிய எல்லைகளில் அமைந்துள்ள அனைத்துலக பாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், இந்தத் தடுப்பூசிச் சான்றிதழ்களை சோதனையிட்டு சரிபார்ப்பர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையே லங்காவி தீவுடனான பயண ஏற்பாடு இம்மாதம் 16ஆம் தேதியன்று தொடங்கவிருப்பது குறித்தும் டாக்டர் ஆதம் பேசியிருந்தார்.
கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகளின் வருகையைக் கண்காணிப்பதற்காக தீவின் நுழைவிடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் இருப்பர் என்று டாக்டர் ஆதம் கூறினார்.