சிங்கப்பூரில் உள்ள அனைவரும் அடுத்த இரு வாரங்களுக்கு அத்தியாவசியமற்ற சமூக நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக, மூத்தோர் அல்லது வயது முதிர்ந்த குடும்ப உறுப்பினர்களுடன் வசிப்போருக்கு இது பொருந்தும்.
மற்றொருவரின் வீட்டிலேயோ பொது இடத்திலேயோ நாள் ஒன்றுக்கு சமூக ஒன்றுகூடல்கள் எண்ணிக்கையை ஒன்றைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
“தடுப்பூசி போட்டுக்கொண்டோர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் என அனைவரும் தங்களை சுயமாக விரைவுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக, தொற்று அபாயம் அதிகமுள்ள நடவடிக்கைகள் அல்லது பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு இது பொருந்தும்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், “கிருமித்தொற்று அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் உங்களது சமூக நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளவும்,” என்று கேட்டுக்கொண்டார்.
உள்ளூர் அளவில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதற்கிடையே, வேலையிடங்களில் சமூக ஒன்றுகூடல்களுக்கு வரும் புதன்கிழமையிலிருந்து அனுமதி வழங்கப்படாது.