டெல்டா கொவிட்-19 கிருமி வகையை முறியடிக்க தடுப்பூசியை மட்டுமே சார்ந்திருக்க இயலாது என்று தொற்றுநோய்களுக்கான தேசிய நிலை யத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் தெரிவித்துள்ளார்.
எனவே, டெல்டா கிருமி வகைக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்றார் அவர்.
“கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்க கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு இருமடங்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும். தடுப்பூசியை மட்டுமே நம்பியிருக்க முடியாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டபோதிலும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது ஆகியவை மிகவும் முக்கியம் என்று பேராசிரியர் லியோ கூறினார்.
தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் இரண்டாவது ஆண்டு விழாவை அனுசரிக்கும் வகையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் இன்று பேட்டியளித்தார். இவ்வாண்டு சமூக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,100 பேருக்கு நிலையம் சிகிச்சை அளித்துள்ளது. அவர்களில் 99.6 விழுக்காட்டினர் டெல்டா கிருமி வகையால் பாதிக்கப்பட்டவர்கள்.
முதன்முதலில் தலைதூக்கிய கொவிட்-19 கிருமியைவிட டெல்டா கிருமி வகை மிக வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடியது என்றார் பேராசிரியர் லியோ.
டெல்டா கிருமியால் பாதிக்கப்பட்டோர் கூடுதல் அளவிலான கிருமியை தங்கள் உடலிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவிக்கப்பட்டது. சுவாசக்குழாயின் மேல் பகுதியில் டெல்டா கிருமி தொற்றிக்கொள்வதால் மற்றவர்களுக்குப் பரவும் சாத்தியம் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாது, டெல்டா கிருமியால் பாதிக்கப்பட்டோருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகள் தென்படும். இதனால் அது மற்றவர்களுக்கு மிக வேகமாகப் பரவக்கூடியது. டெல்டா கிருமிப் பரவலை சரியான வகையில் கட்டுப்படுத்தாவிட்டால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பேராசிரியர் லியோ எச்சரிக்கை விடுத்தார்.
ஏற்கெனவே கடந்த ஒரு மாதமாக சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பேருந்து நிலையங்கள், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள், கடைத்தொகுதி ஆகியவற்றில் கொவிட்-19 குழுமங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மாதத்துக்கு 200 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டதை தேசிய பொதுச் சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் எதிர்ப்புப் பிரிவின் இயக்குநரான இணைப் பேராசிரியர் மெத்தயஸ் டோ சுட்டினார்.
இந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மாதத்துக்கு 590ஆக அதிகரித்துள்ளது. இதற்கு டெல்டா கிருமி வகையும் காரணம்.
கடந்த ஒரு வாரமாக சமூக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,325ஆக அதிகரித்துள்ளது. அதற்கு முந்திய வாரத்தில் 723 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.