தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கும் தானியங்கி முறைக்கும் மாறுவதற்கு நீண்டகாலமாக ஊழியர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான நிறுவனங்கள் 80% வரை நிதியுதவி பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அது பற்றிய கூட்டுத் திட்டத்தை கட்டட கட்டுமான ஆணையமும் தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் தொடங்கியுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த இயந்திரவியல், தானிங்கித் திட்டத்தை தேசிய வளர்ச்சி மற்றும் தொடர்பு, தகவல் துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் நேற்று அறிவித்தார். நான்கு நாட்கள் நீடித்த அனைத்துலக கட்டட வார இணையவழி நிகழ்வில் அவர் பேசினார்.
இத்திட்டத்தின் கீழ், இயந்திரங்கள், தானியங்கிச் சாதனங்களைப் பெறுவதற்கான தகுதிபெறும் செலவுகளில் 80% வரையிலான மானியத்துக்கு சிறிய நடுத்தர நிறுவனங்களும் பெரிய கட்டுமான நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.
கட்டடத் துறையில் உள்ள இத்தகைய நிறுவனங்கள் குறைந்த திறன்பெற்ற ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உற்பத்தித் திறனை உயர்த்தவும் இயந்திரங்களும் தானியங்கிச் சாதனங்களும் உதவும் என்று திரு டான் கூறினார். அத்துடன் வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இத்தகைய தீர்வுகள் உதவும் என்றும் திரு டான் தெரிவித்தார்.
கட்டுமானத் தளங்களில் உயரத்திலிருந்து கீழே விழுவது, அதிக எடையுள்ள சாதனங்களைத் தூக்கும்போதும் நகர்த்தும்போதும் ஏற்படக்கூடிய காயங்கள் போன்றவை ஏற்படும் அபாயத்தை இயந்திரத் தொழில்நுட்பங்கள் குறைக்கும் என்று திரு டான் குறிப்பிட்டார்.
கட்டட, கட்டுமானத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு உதவ, இத்தகைய தொழில்நுட்பங்களைத் தயாராக வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அத்தொழில்நுட்பங்கள் தயாராகும்போது அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும்படி திரு டான் கட்டட, கட்டுமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.
புத்தாக்கத் தீர்வுகளைச் சோதித்து அனுமதி வழங்கும் கட்டடப் புத்தாக்க செயல்குழுவில் இயந்திரமயம், தானியங்கிச் சாதனங்கள் போன்றவை 2019இல் சேர்க்கப்பட்டுள்ளதை திரு டான் சுட்டினார். இச்செயற்குழு இதுவரை 100 புத்தாக்கத் தீர்வுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் இரண்டு இயந்திரமயத் தீர்வுகளாகும்.
மவுண்ட் அல்வீனியா மருத்துவ மனை கட்டடம் இவ்வாண்டு விரிவாக்கப்படும்போது, அத்தகைய ஒரு தீர்வு பயன்படுத்தப்படும். தானியங்கி தூக்கு இயந்திரம், எடை அதிகம் உள்ள கட்டுமானப் பொருட்களைத் தூக்கிச் செல்லும்.
இந்த இயந்திரம் உற்பத்தித் திறனை 30% மேம்படுத்தி வேலையிடப் பாதுகாப்பை உயர்த்த உதவும் என்று திரு டான் கூறினார்.