விடுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டு ஊழியர்களைச் சமூகத்துடன் கலந்துறவாட அனுமதிக்கும் ஒரு முன்னோடித் திட்டம் அடுத்த வாரம் தொடங்குகிறது.
தொடக்கமாக விடுதிகளைச் சேர்ந்த, முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 500 ஊழியர்கள் வரை சமூகத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வர, வாரம் ஆறு மணி நேரம் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
அப்படி அனுமதிக்கப்படும் ஊழியர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் முந்தைய இரண்டு வார காலத்தில் கொவிட்-19 தொற்று இருந்திருக்கக்கூடாது.
விடுதிகளில் நல்ல பாதுகாப்பு வசிப்பிட நடவடிக்கைகள் நடப்பில் இருக்க வேண்டும். தங்கி இருக்கும் ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு அறிவித்தது.
அடுத்த வாரம் தொடங்கும் முன்னோடித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்டு இருக்கும் முதல் இடம் லிட்டில் இந்தியா.
அங்கு செல்வதற்கு முன்னதாக ஊழியர்கள் கொவிட்-19 விரைவுப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சென்று வந்ததற்குப் பிறகு மூன்று நாட்கள் அந்தச் சோதனைக்கு உட்பட வேண்டும்.
அமைச்சு, ஒரு மாத காலம் இந்த முன்னோடித் திட்டத்தை மதிப்பிட்டு வரும். அதற்குப் பிறகு இந்தத் திட்டத்தைப் பாதுகாப்பான முறையில் எந்த அளவுக்கு, எப்படி நீட்டிக்கலாம் என்பதை அது முடிவு செய்யும்.
அமைச்சு வரும் திங்கள் முதல் இதர பல கட்டுப்பாடுகளையும் தளர்த்துகிறது.
விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கான புதிய கட்டாய சுய பரிசோதனை ஏற்பாடும் அன்றுதான் தொடங்குகிறது.
இதன்படி, ஊழியர்கள் காலக்கிரம முறைப்படி தங்களைத் தாங்களே பரிசோதித்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் அல்லது 14 நாட்களுக்கும் ஒரு முறை ஊழியர்கள் உட்பட வேண்டிய பரிசோதனையுடன் கூடுதலாக இந்த ஏற்பாடு இடம்பெறுகிறது.
தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர் அனைவரும் வரும் திங்கள் முதல் தங்களுக்குரிய பொழுதுபோக்கு இடங்களுக்கு வாரம் இரண்டு முறை சென்று வரலாம்.
திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், சமய நிகழ்ச்சிகள் போன்ற நடவடிக்கைகளை அமலாக்க, அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து அமைச்சு செயல்படுத்தும். அரசு சாரா அமைப்புகள் ஏற்பாடு செய்யும் உள்ளூர் கவர்ச்சி இடங்களுக்கான மகிழ் உலாவும் அனுமதிக்கப்படும்.
இதில் கலந்துகொள்வதற்கு முன்னதாக அனைவரும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
இதனிடையே, நேற்று வெஸ்ட்லைட் மண்டாய் தங்குவிடுதிக்குச் சென்ற மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும் மாலையிலும் ஊழியர்கள் லிட்டில் இந்தியா செல்ல அனுமதிப்பது முதல் திட்டமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
காலை, மாலை ஒவ்வொரு நேரத்திலும் ஏறத்தாழ 80 ஊழியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார் அவர். சமூக வருகைகளைப் பொறுத்தவரை திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல் இராது.
ஊழியர்கள் முதலில் வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவும் பிறகு குறிப்பிட்ட இடங்களுக்குள் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் தாராளமாகச் சென்று வரவும் அனுமதிப்பது சாத்தியமான ஒன்றாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று சில வெளிநாட்டு ஊழியர்கள் தமிழ் முரசு செய்திக் குழுவிடம் தெரி வித்தனர்.
"கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, விடிவு காலம் பிறந்துள்ளது," என்று கடந்த ஏழு ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வரும் குளிர்சாதன தொழில்நுட்பர் திரு சுப்பையா ஞானமணி தெரிவித்தார்.