முன்னுரிமை அடிப்படையில் தொடக்கநிலை ஒன்றுக்காக முன்பதிவுசெய்யத் தகுதிபெறாத மாணவர்களுக்காக அடுத்த ஆண்டுமுதல் மேலும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளியில் மாணவருக்கு இடம் கிடைக்கும் வாய்ப்பை இம்மாற்றம் உறுதிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இக்குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்படும் இடங்கள் இனி இரட்டிப்பாகி 40 ஆக்கப்படும்.
இப்போது இப்பிரிவினர் முன்பதிவின் '2சி' கட்டத்துக்குத் தகுதிபெறுகின்றனர். பள்ளியுடன் எவ்விதத் தொடர்பும் அல்லாதவருக்கும்; பள்ளிக்கும் வீட்டுக்கும் உள்ள தொலைவைக் கொண்டும் பள்ளியில் இந்த '2சி' கட்டம் இடமளிக் கிறது. இக்கட்டத்திற்காக 2014ஆம் ஆண்டு முதல் 20 இடங்களை கல்வி அமைச்சு ஒதுக்கத் தொடங்கியதிலிருந்து போட்டி அதிகரித்துவிட்டதாக அமைச்சு தெரிவித்தது.
இவ்வாண்டு '2சி' கட்டத்தின்கீழ் குலுக்கல் முறையில் இடங்களை ஒதுக்கும் நிலை, மூன்றில் ஒரு பள்ளிக்கு நேர்ந்தது. 2014ல் நான்கில் ஒரு பள்ளிக்கு இந்த நிலை ஏற்பட்டது.
புதிதாக செய்யப்படும் இந்த மாற்றத்தால் அனைவருக்கும் ஏற்புடைய, அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பள்ளிகள் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
பிள்ளைகளின் கல்வி தொடர்பான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு '2சி' கட்டத்தின்கீழ் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது. பயணத்திற்குக் குறைவான நேரத்தை செலவிடுவதுடன் தாங்கள் ஆர்வம் கொண்ட மற்ற அம்சங்களில் கவனம் செலுத்த மாணவர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கும் என்றும் குடும்பத்தினருக்கு இது வசதியாக இருக்கும் என்றும் அமைச்சு விளக்கியது.
இதற்கிடையே, '2பி' கட்டத்தின்கீழ் தொடர்ந்து 20 இடங்கள் ஒதுக்கப்படும். பெற்றோர் தொண்டூழியர்கள், குலமரபுச் சங்கங்களுடன் தொடர்புடையவர்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கு இந்தக் கட்டத்தின் கீழ் இடம் ஒதுக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மாணவர்களின்
பிள்ளைகளுக்கு ஒரே கட்டம்
'2சி' கட்டத்துக்காக கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுவதால் பல பள்ளிகளில் '2ஏ (2)' கட்டத்தின்கீழ் இடங்கள் இல்லாமல் போகலாம் என்றது கல்வி அமைச்சு. பெற்றோர் அல்லது சகோதரர்கள் முன்னாள் மாணவராக இருந்திருந்தால் '2ஏ (2)' கட்டத்தின்கீழ் பிள்ளைக்கான இடத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். இனி '2ஏ (1)' மற்றும் '2ஏ (2)' கட்டங்களை இணைப்பதாக அமைச்சு முடிவெடுத்துள்ளது.
பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தில் அல்லது பள்ளியின் ஆலோசனை, நிர்வாகக் குழுவில் இடம்பெறுவோர், தங்களின் பிள்ளைக்காக விண்ணப்பிக்கத் தகுதிபெறும் கட்டமாக '2ஏ1' இருந்தது. இரண்டு கட்டங்களையும் இணைப்பதால், இரு தரப்பினரும் இனி ஒரே கட்டத்தின்கீழ் இடத்துக்காக போட்டியிடுவர்.
கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகள், '2ஏ (2)' கட்டத்தின்கீழ் தகுதிபெறும் நிலையில், இந்த மாற்றத்தால் அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் கல்வி அமைச்சராக இருந்த லாரன்ஸ் வோங், தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவுமுறை குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

