உள்ளூரில் கொவிட்-19 தொற்று வேகமாக உயர்ந்து வருவது கவலையளிப்பதாகவும் அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்கள் மிகவும் முக்கியமாக இருக்கும் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
அதிகரித்துவரும் தொற்றால் கூடுதலானோர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு இறப்புகளுக்கு வித்திடுமா என்பது அடுத்து நான்கு வாரங்களுக்குள் தெரியும்.
இரு வாரங்களுக்கு முன்பு சராசரி அன்றாட தொற்று எண்ணிக்கை 76 ஆக இருந்தது. ஆனால், கடந்த வாரத்தில் அது 288 ஆக கூடியது.
இந்த எண்ணிக்கை விரைவில் 1,000ஐ தாண்டக்கூடும் என சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது. கிருமித்தொற்றுப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் கூடுதலானோருக்குத் தொற்று கண்டறியப்படுவதே அதற்குக் காரணம்.