சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) 520 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. சமூக அளவில் 454 பேருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 63 பேருக்கும் தொற்று உறுதியானது.
உள்ளூரில் தொற்றுக்கு ஆளான அந்த 520 பேரில் 137 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோராவர்.
இதுபோக, வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த மூவருக்கு தொற்று உறுதியானது.
இந்நிலையில், மருத்துவமனைகளில் தற்போது 780 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 54 பேருக்கு உயிர்வாயு அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எழுவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
மருத்துவமனைகளில் உயிர்வாயு தேவைப்படுவோர் எண்ணிக்கை ஒரே நாளில் 35லிருந்து 54 ஆக உயர்ந்தது. அவர்களில் 44 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.
இதற்கிடையே, பாய லேபார் அருகே எண் 1 கிரீன்விச் டிரைவில் டிஎச்எல் மையத்தில் 28 பேர் கொண்ட புதிய தொற்றுக் குழுமம் உருவெடுத்துள்ளதாக சுகாதார் அமைச்சு அறிவித்துள்ளது. அந்தக் குழுமத்தில் ஞாயிற்றுக்கிழமை மூவர் சேர்க்கப்பட்டனர்.