வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மானிய விநியோக முறை தானியக்கமயமாகிறது. விண்ணப்பதாரர்கள் மானியம் பெற தகுதி பெறுகிறார்களா என்பதையும் இந்த முறையே தீர்மானிக்கிறது.
தானியக்கமயமானதும் மானியம் பெற ஒருவர் தகுதி பெறுகிறாரா இல்லையா என்பதைப் புதிய முறை துல்லியமாகக் கணித்துவிடும்.
சொத்து உடைமை பற்றிய அல்லது மாற்று வருமானம் பற்றிய தகவல்களை வீவகவிடம் தெரிவிக்க விண்ணப்பதாரர்கள் தவறினாலும்கூட புதிய தானியக்க முறை அவர்கள் தகுதி பெறுகிறார்களா என்பதைக் கணித்துவிடும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தகுதி பெறாத 13 விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் $405,000 வீட்டு மானியம் கொடுக்கப்பட்டதாக கடந்த ஜூலை மாதம் தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் தெரிவித்தது.
இதனையடுத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
12 பேருக்குத் தவறுதலாகக் கொடுக்கப்பட்டுவிட்ட மத்திய சேமிப்பு நிதி வீட்டு மானியத்தைத் திரும்பப் பெற வீவக உடனடி நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் தெரிவித்த 13வது விண்ணப்பதாரர் சரியாக மதிப்பிடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த அலுவலகம் சுட்டிக்காட்டி இருக்கும் மேலும் 1,055 விண்ணப்பதாரர்களின் தகுதி நிலையைக் கழகம் சரிபார்த்து வருகிறது.
இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கை இந்த ஆண்டுக்குள் முடிவடையும். பிறகு முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.