வெளிநாடுகள் சிங்கப்பூர் அரசியலில் தலையிடுவதைத் தடுக்க நடவடிக்கை
சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீட்டைத் தடுக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் நேற்று வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பயனாளர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறும் இணையத் தகவல்களை நீக்குமாறும் பயனாளர்களின் கணக்குகளை முடக்குமாறும் இணைய, சமூக ஊடக சேவை வழங்குநர்களைக் கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பல அதிகாரங்களை அம்மசோதா அரசாங்கத்திற்கு வழங்கும்.
பகைமையுணர்வைத் தூண்டும் பிரசாரங்கள் மூலமாகவும் உள்ளூரில் மாற்றாள்களைக் கொண்டும் உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிடுவதைத் தடுக்கும், கண்டறியும், தகர்க்கும் சிங்கப்பூரின் ஆற்றலை அந்த மசோதா வலுப்படுத்தும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூர் அரசியல் செயல்பாடுகளுடன் நேரடித் தொடர்பு உடையவர்கள் அரசியல் சார்ந்த முக்கிய நபர்களாக (பிஎஸ்பி) வகைப்படுத்தப்படுவர்.
வெளிநாட்டுத் தலையீடுகளும் பகைமையைத் தூண்டும் தகவல் பிரசாரங்களும் சிங்கப்பூரின் அரசியல் இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல்களாக விளங்கி வருகின்றன என்று அமைச்சு குறிப்பிட்டது.
"அரசியல் விவகாரங்களில் சிங்கப்பூரர்களைத் தவறாக வழிநடத்தும், இனம், சமயம் சார்ந்து கருத்து பேதங்களையும் வேற்றுமையையும் ஏற்படுத்தும் அல்லது பொது அமைப்புகள் மீதான நம்பிக்கையைக் கீழறுக்கச் செய்யும் முயற்சிகளில் அந்நிய சக்திகள் ஈடுபடலாம்," என்று அமைச்சு கூறியது.
வெளிநாட்டுத் தலையீடுகள் தொடர்பான நடவடிக்கைகளைப் பெறவும் ஊறு விளைவிக்கும் இணையத் தொடர்புகளைத் தடுக்கவும் விரைந்து செயல்பட்டு அத்தகைய தவறான தகவல் பரவலைத் தடுக்கவும் அல்லது கட்டுப்படுத்தவும் அரசாங்கத்திற்குப் புதிய மசோதா அதிகாரம் அளிக்கும். மேலும், அந்நிய சக்திகள் செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளதாக தனிநபர்களை அல்லது நிறுவனங்களை வகைப்படுத்தவும் அவ்வப்போது உரிய தகவல்களை அளிக்கும்படி கட்டாயப்படுத்தவும் வெளிநாட்டுத் தலையீட்டு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெறவும் அதிகாரிகளால் முடியும்.
வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு சிங்கப்பூர் விதிவிலக்கு அல்ல என்று அமைச்சு குறிப்பிட்டது.
1980களில் சிங்கப்பூர்க்கான அமெரிக்கத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஹேங்க் ஹென்ரிக்சன் உள்ளூர் வழக்கறிஞர்கள் சிலரை எதிர்க்கட்சிகளில் இணையும்படியும் 1988 பொதுத் தேர்தலில் போட்டியிடும்படியும் தூண்டியதையும் அதற்காக அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதையும் அமைச்சு சுட்டிக்காட்டியது.
2018, 2019ஆம் ஆண்டுகளில் இன்னொரு நாட்டுடன் சிங்கப்பூர் இருதரப்புப் பிரச்சினைகளை எதிர்கொண்டபோது, பெயரில்லாச் சமூக ஊடகக் கணக்குகள்வழி சிங்கப்பூருக்கு எதிராக இணையத்தில் அதிகளவில் கருத்து பதிவிடப்பட்டதையும் அது சுட்டியது.
வெளிநாட்டுத் தொடர்பு குறித்து கட்டாயம் தெரிவிக்க வேண்டும்
அரசியல் சார்ந்த பதவிகளில் இருப்போரும் அரசியல் கட்சிகளும் வெளிநாடுகளின் செல்வாக்கில் சிக்கிவிடாமல் தடுக்க புதிய மசோதாவின்கீழ் கடும் நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டி இருக்கும்.
வெளிநாட்டுக் கடப்பிதழ், வெளிநாட்டில் வேலை செய்யும் உரிமை அல்லது அங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்கும் உரிமை போன்றவற்றைப் பெற்றிருந்தால் அதுகுறித்து அரசாங்கத்திடம் தகவல் தெரிவிப்பது கட்டாயமாகும்.
அமைச்சர்கள், அரசியல் சார்ந்த பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் உள்ளிட்டோர் வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) மசோதாவின்கீழ் அரசியல் சார்ந்த முக்கிய நபர்களாக வரையறுக்கப்படுவர்.
அவர்களுடன், உள்துறை அமைச்சால் நியமிக்கப்படும் தகுதியான அதிகாரி, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எந்த ஒரு சிங்கப்பூரரையும், சிங்கப்பூரில் வசிக்கும் எவர் ஒருவரையும், அல்லது உள்ளூரில் பதிவுசெய்யப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தையும் அரசியல் சார்ந்த முக்கிய நபராகக் குறிப்பிட முடியும்.
ஆயினும், அப்படிக் குறிப்பிடப்படும் நபர்கள், அரசியல் சார்ந்த முக்கிய நபர்களாக வரையறுக்கப்படுவோரைக் காட்டிலும் கடுமை குறைந்த கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவர்.
எடுத்துக்காட்டாக, அரசியல் சார்ந்த முக்கிய நபர்களாகக் குறிப்பிடப்படுவோர் உள்ளூரில் அல்லது வெளிநாட்டில் இருந்து ஒரே தடவையாக 10,000 வெள்ளி அல்லது அதற்குமேல் நன்கொடை பெற்றாலும் ஒருவரிடமிருந்தே குறித்த காலத்தில் $10,000 அல்லது அதற்குமேல் நன்கொடை பெற்றாலும் தெரிவிக்க வேண்டும். அவர்களின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள் பங்கேற்கக்கூடாது.
அரசியல் சார்ந்த முக்கிய நபர்களாகக் குறிப்பிடப்படுவோர், அவ்வாறு குறிப்பிடப்படுவதை எதிர்த்து உள்துறை அமைச்சிடம் மேல்முறையீடு செய்யலாம்.

