சிங்கப்பூரில் புதிதாக 607 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 13) இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சமூக அளவில் 534 பேர்க்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 63 பேர்க்கும் தொற்று உறுதியானது. அதுபோக, வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த 10 பேரிடமும் தொற்று கண்டறியப்பட்டது.
மருத்துவமனைகளில் தற்போது 774 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 57 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எண்மர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டோரில் 51 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.
இதற்கிடையே, புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52ல் உள்ள ரென் சி தாதிமை இல்லத்தில் 28 பேர் கொண்ட புதிய தொற்றுக் குழுமம் ஒன்று உருவெடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 20 பேர் அந்த இல்லத்தில் வசிப்பவர்கள். எஞ்சிய எண்மர் அங்கு பணிபுரியும் ஊழியர்கள்.
ஏவரி லாட்ஜ் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் ஏற்கெனவே தொற்றுக் குழுமம் அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்விடுதியில் மேலும் 12 பேர்க்குத் தொற்று உறுதியானதை அடுத்து, அக்குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 58ஆக உயர்ந்தது.