அதிக உயிரிழப்பின்றி தற்
போதைய கொவிட்-19 சூழலைக் கடந்துவிட்டால் அது இந்தப் போராட்டத்தில் சிங்கப்பூர் இதுவரை பார்க்காத வெற்றியாக அமையும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்படும்போது மரண எண்ணிக்கையும் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறதா என்பதை அறிய, நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆசியான்-ஐரோப்பிய ஒன்றிய சுகாதார உச்சநிலை மாநாட்டில் காணொளி மூலம் பேசிய அமைச்சர் ஓங், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால் அங்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு மரண
மடைவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதைச் சுட்டினார்.
எனினும், பல கொவிட்-19 அலைகளைக் கடந்த பின்னரே இந்த நாடுகள் இந்நிலையை அடைந்துள்ளதாக அவர் கூறினார்.
மாறாக, சிங்கப்பூரில் தற்
போதைய கொவிட்-19 அலை சுமார் 23 நாட்களுக்கு முன் தொடங்கியது. ஆக அண்மைய கொவிட்-19 அலையில் குறைந்தது 6,600 பேருக்குப் புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ஏழு பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி புதிய அலையின் காரணமாக இதுவரை இருவர் மரணமடைந்தனர்.
"முன் அனுபவம் இல்லாத, இயல்பான எதிர்ப்பு சக்தி இல்லாது, தடுப்பூசி தந்துள்ள எதிர்ப்பு சக்தியை மட்டுமே கொண்டு
சிங்கப்பூர் இந்தப் புதிய கொவிட்-19 அலையை எதிர்கொள்கிறது," என்றார் திரு ஓங்.
எனவே, அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு ஒன்றுக்குப் பலமுறை யோசிப்பது மிகவும் முக்கியம் என்று
அமைச்சர் ஓங் கூறினார்.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஓங், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முடிவை மற்ற நாடுகள் அவற்றின் குடிமக்களிடமே விட்டுவிடுகின்றன என்றும் அதே அணுகுமுறையை சிங்கப்பூர் கடைப்பிடிப்பதாகவும் கூறினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிந்திய உலகிற்குத் தேவையான சுகாதாரத் தீர்வுகள் குறித்து உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட பன்னாட்டு நிபுணர்கள் கலந்துரையாடினர்.
கொவிட்-19 தொடர்பாக சிங்கப்பூரின் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளுமாறு அமைச்சர் ஓங்கிடம் கேட்கப்பட்டது.
நெருக்கடிநிலையின் கோரத் தாண்டவத்தை எதிர்கொள்ள ஐந்து முக்கிய அம்சங்கள் சிங்கப்பூருக்குக் கைகொடுத்துள்ளதாக திரு ஓங் தெரிவித்தார்.
துரிதமாக நடத்தப்பட்ட தடுப்பூசி போடும் திட்டம், வலுவான சமூகப் பராமரிப்புத் திட்டம், காணொளி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் முறை, சிங்கப்பூரர்கள் கடைப்பிடிக்கும் தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கம், தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் ஆற்றலை
வளர்த்தல் ஆகியவை கொவிட்-19 பாதிப்பின் கடுமையைக் குறைக்க உதவி செய்திருப்பதாக திரு ஓங் பகிர்ந்துகொண்டார்.
இருப்பினும், சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்த சில வாரங்கள் நெருக்கடியானவை என்று அமைச்சர் ஓங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

