ஜோசப் ஸ்கூலிங், குவா ஸெங் வென் இருவரும் தேசிய சேவைக்குச் செல்வர்

ஜோசப் ஸ்கூலிங், குவா ஸெங் வென் இருவரும் தேசிய சேவைக்குச் செல்வர்

2 mins read
e47123c3-68cb-4cfc-ad2b-e837b5c8ff31
-

சிங்கப்பூரில் தேசிய நீச்சல் விளையாட்டாளர்களான 26 வயது ஜோசப் ஸ்கூலிங்கும் 24 வயது குவா ஸெங் வென்னும் தேசிய சேவையை தொடங்கவுள்ளனர். சென்ற மாதம் 31ஆம் தேதி வரை இவர்கள் தேசிய சேவை ஆற்றுவது ஒத்திவைக்கப்பட்டது. இனி அந்த அனுமதி நீட்டிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விருதுகளைப் பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ள, மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தேசிய சேவை ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.

தேசிய சேவைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னால் சில செயல்முறைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்குப் பிறகு இருவரும் தேசிய சேவை ஆற்ற விண்ணப்பிப்பர்.இதன் தொடர்பில் அரசாங்கம் அளித்த வலுவான ஆதரவுக்கு ஸ்கூலிங் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தேசிய சேவை ஆற்றுவதை ஒத்திவைக்காமல் இருந்திருந்தால் தன் படைத்த சாதனைகளைப் புரிந்திருக்கமுடியாது என்று அவர் சொன்னார்.

தேசிய சேவையின் ஒத்திவைப்பு, ஸ்கூலிங்கிற்கு 2014ஆம் ஆண்டிலும் குவாவிற்கு 2015ஆம் ஆண்டிலும் தொடங்கியது. 2016ஆம் ஆண்டில் பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இவர்கள் இருவரும் சாதனை விருதுகளைப் பெற்றனர். ஸ்கூலிங், 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி அங்கத்தில் வென்று சிங்கப்பூருக்கான முதல் தங்க ஒலிம்பிக் விருதைப் பெற்றார். அதுவே ஒலிம்பிக் வரலாற்றில் சிங்கப்பூர் வென்ற முதல் தங்கப் பதக்கம்.

உயர்தர போட்டிகளில் பங்கேற்கத் தான் மிகுந்த ஊக்கத்துடன் இருப்பதாகவும் நீச்சலில் தான் இன்னும் அதிகமாக சாதிக்கவும் பங்காற்றவும் வேண்டும் என்றும் குவா கூறினார். தேசிய சேவை ஆற்றுவதை ஒத்திவைப்பதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளலாமா என்பது கலாசார, சமுதாய, இளையர் துறை அமைச்சின் ஆலோசனையுடன் முடிவெடுக்கப்படும். இதன் தொடர்பில் உள்ள வலுவான விதிமுறைகளைக் கருத்தில்கொண்டே முடிவெடுக்கப்படும்.