ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி பெரியளவில் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்துலக சமூகம் உடனடியாக ஆதரவு அளிக்க வேண்டும். அந்த ஆதரவு தொடர வேண்டும் என்று ஐநா அகதிகள் அமைப்பின் தலைவர் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டால் அதனால் உலகளவில் தாக்கங்கள் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார். ஐநா அகதிகளுக்கான தூதர் பிலிப்போ கிராண்டி ஆப்கானிஸ்தானுக்கு மூன்றுநாள் பயணம் மேற்கொண்டு பிறகு ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான சூழ்நிலை தொடர்ந்து மோசமாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அந்த நாட்டில் அரசாங்கச் சேவைகளும் பொருளியலும் வீழ்ந்துவிட்டால் இன்னும் மோசமான பாதிப்புகள் ஏற்படும். நிலையில்லாத சூழ்நிலை கூடிவிடும் என்று அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் அனைத்துலக சமூகம் ஆப்கானிஸ்தானில் விரைவாக ஈடுபாடு காட்டவேண்டும். அங்கு பெரியளவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றாரவர்.
ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்பாகவே அந்த நாட்டு மக்களில் ஏறத்தாழ பாதிப்பேருக்கு அதாவது 18 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆப்கானியர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்பட்டதை அறிக்கையில் அகதிகளுக்கான தூதர் கூறினார்.
அந்நாட்டில் ஏற்கெனவே 3.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கிறார்கள். பஞ்சம், கொவிட்-19 தொற்று என்று பல பாதிப்புகளை ஆப்கானிஸ்தான் சந்தித்து வரு கிறது என்பதை அவர் சுட்டினார்.