சிங்கப்பூரில் புதிதாக 910 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 16) இரவு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த ஆண்டு மே 1ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட ஆக அதிக ஒருநாள் பாதிப்பு இதுவே.
அவர்களில் 244 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.
உள்ளூரில் தொற்றுக்கு ஆளானவர்களில் சமூக அளவில் 803 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 103 பேரும் அடங்குவர்.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த நால்வருக்குத் தொற்று உறுதியானது.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 72 வயது மாது ஒருவர் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்தார்.
செப்டம்பர் 4ஆம் தேதி அவரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இரு நாள்கள் கழித்து அவருக்குத் தொற்று உறுதியானது.
அவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் கொவிட்-19 தொற்றுக்காக தற்போது 837 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தின நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 822 ஆக இருந்தது.
அவர்களில் 77 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 12 பேர் உள்ளனர். கடுமையாக நோய்வாய்ப்பட்டோரில் 69 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.