பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) கொவிட்-19 ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
முதலிரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட எட்டு மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியை அவர் போட்டுக்கொண்டார். இவ்வாண்டு ஜனவரியில் பிரதமர் லீ ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
“கொவிட்-19 பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொவிட்-19க்கு எதிரான உங்களது பாதுகாப்பை பூஸ்டர் தடுப்பூசி வலுப்படுத்தும்,” என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
அறுபது வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோர், நோயெதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பான சிங்கப்பூரின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதை பிரதமர் லீ சுட்டினார்.
“உங்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டால் அதைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் கடுமையாக நோய்வாய்ப்படும் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லும் சாத்தியத்தை அது குறைக்கும்,” என்றார் அவர்.