புதிதாகக் கட்டப்படும் வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளுக்கு மேம்படுத்தப்பட்ட தரநிலைகளை மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) அறிவித்தது.
ஓர் அறையில் அதிகபட்சமாக 12 ஊழியர்கள் தங்குவது, கழிப்பறையைப் பகிர்ந்துகொள்ளும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஆகியவை புதிய விதிமுறைகளில் அடங்கும்.
ஓராண்டு முழுவதுமாக நடத்தப்பட்ட ஆய்வு, சோதனைத்திட்டம் ஆகியவற்றுக்குப் பிறகு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தங்குவிடுதிகளில் மக்கள் நெரிசலைக் குறைப்பதற்காகக் கட்டப்பட்ட ‘கியூபிடி’ எனப்படும் விரைவாகக் கட்டப்படும் விடுதிகளில் இந்தப் புதிய தரநிலைகள் சோதனை செய்யப்பட்டன.
‘பிபிடி’ எனப்படும் குறிப்பிட்ட காரணங்களுக்காகக் கட்டப்படும் விடுதிகள், முன்னதாக தொழிற்சாலைகளாக இருந்த விடுதிகள், தற்காலிகக் கட்டுமான விடுதிகள் உள்ளிட்ட அனைத்துப் புதிய விடுதிகளுக்கும் இது பொருந்தும்.
திரட்டப்பட்ட கருத்துகளைக் கருத்தில் கொண்டு தரநிலைகள் மேம்படுத்தப்பட்டதாக மனிதவள அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர் தங்குவிடுதிகளில் கடந்தாண்டு கிருமிப்பரவல் மிக வேகமாகப் பரவியதை அடுத்து, ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் உன்னிப்பாக ஆராயப்பட்டது.
ஏற்கெனவே இயங்கி வரும் தங்குவிடுதிகளில் ஒரு படுக்கை அறையில் அதிகபட்சமாக எத்தனை பேர் தங்கலாம் என்ற வரம்பு இல்லை. இதனால் அந்த விடுதிகளில் ஓர் அறையில் 12 முதல் 16 வரையிலான ஊழியர்கள் தங்கும் நிலைமை நிலவுகிறது.
பெரும்பாலான தங்குவிடுதிகளில் கிட்டத்தட்ட 15 பேர் கழிப்பறை வசதிகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.