மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் சாத்தியத்தை மறுக்கவில்லை.
அவர் இதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் நஜிப் தேர்தலில் போட்டியிட இயலாத சூழல் உள்ளது.
அந்தக் குற்றத் தீர்ப்பை மறுத்து நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
இருந்தாலும் நாட்டின் மாமன்னரிடம் இருந்து மன்னிப்பு பெற்றாலொழிய அவர் அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்தலில் போட்டியிட முடியாது.
நஜிப்பின் அம்னோ கட்சி பிரதமர் பதவியைப் சென்ற மாதம் பெற்றது. அக்கட்சி அதிகாரத்திற்கு வந்ததை அடுத்து, குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கும் கட்சித் தலைவர்கள் மீது கருணை காட்டப்படலாம் என எதிர்த் தரப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.