சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 19) தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,012 பேருக்குத் தொற்று உறுதியானது. கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆக அதிக ஒருநாள் தொற்று இது.
உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் சமூக அளவில் 919 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 90 பேரும் அடங்குவர். அவர்களில் 321 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த மூவருக்கும் தொற்று உறுதியானது.
மருத்துவமனைகளில் தற்போது 873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தின நிலவரப்படி இந்த எண்ணிக்கை 863 ஆக இருந்தது.
மருத்துவமனைகளில் 118 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. முன்னதாக இந்த எண்ணிக்கை 105ஆக இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 21 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நேற்று முன்தின நிலவரப்படி இந்த எண்ணிக்கை 18ஆக இருந்தது.
கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களில் 116 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.