பெட்டாலிங் ஜெயா: வெளிநாடுகளில் இருந்து வருவோர் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பட்சத்தில், அவர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடியும் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இடர் மதிப்பீட்டின் அடிப்படையில், தனிமைப்படுத்திக்கொள்ள ஏதுவான இடமாக கருதப்பட்டால் மட்டுமே அவர்கள் தங்களது வசிப்பிடத்திலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவர். அத்துடன், அவர்கள் ‘பிசிஆர்’ பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பும் பயணிகள் நாளை 21ஆம் தேதி காலை 8 மணி முதல் www.moh.gov.my என்ற இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மலேசியாவிற்குள் நுழைவதற்கு ஏழு முதல் பத்து நாள்களுக்குள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சு தனது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாகத் தெரிவித்து இருக்கிறது.
ஏழு நாள்களுக்குள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, முடிவு தெரிவிக்கப்படும்.
இம்மாதம் 28ஆம் தேதி முதல் மலேசியாவிற்கு வரும் பயணிகள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள புதிய இணையவாயில் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி வழியாக அத்தகைய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் 6,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் குறிப்பிட்டார்.
“புதிய செயல்முறையின்மூலம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்து மூன்று நாள்களுக்குள் பதில் கிடைத்துவிடும். விண்ணப்பிக்க சுகாதார அமைச்சின் இணையத் தளத்தில் HQA இணைப்பைச் சொடுக்கினால் போதும். இதனால், அதிகமான மலேசியர்களும் இங்கு குடியேறிய வெளிநாட்டவர்களும் மலேசியா திரும்பும்போது தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடியும். பணத்தைச் செலவிட்டு, ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிராது,” என்று டுவிட்டர் மூலமாக அமைச்சர் கைரி கூறியுள்ளார்.