வேலை ஆதரவு திட்டத்தின் (ஜேஎஸ்எஸ்) கீழ் இந்த மாதம் 30ஆம் தேதி முதல் $900 மில்லியனுக்கும் அதிகமான நிவாரண நிதியை 43,900க்கும் மேற்பட்ட முதலாளிகள் பெறுவர். இதன்மூலம் 570,000க்கும் அதிகமான உள்ளூர் ஊழியர்கள் பயன்பெறுவர்.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒற்றுமைக்கான வரவு செலவுத் திட்டத்தின்போது வேலை ஆதரவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வழங்கீட்டுடன் $27.6 பில்லியனுக்கும் அதிகமான நிவாரண நிதி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் என்று நிதி அமைச்சும் உள்நாட்டு வருவாய் ஆணையமும் (ஐராஸ்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
ஏப்ரல் முதல் ஜூலை 2021 வரையில் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குள் உள்ளூர் ஊழியர்களின் மத்திய சேமநிதிக்கு கட்டாயச் சந்தாத் தொகையைச் செலுத்திய முதலாளிகள் இந்த வழங்கீட்டுக்குத் தகுதி பெறுவார்கள்.
செப்டம்பர் மாத வழங்கீடு, ஏப்ரல் முதல் ஜூலை 2021 வரையிலான ஊதியத்தையும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டாம், மூன்றாம் (அதிகரிக்கப்பட்ட விழிப்புநிலை) கட்ட நடைமுறை காலத்துக்கான மேம்படுத்தப்பட்ட வேலை ஆதரவுத் திட்ட வழங்கீட்டையும் உள்ளடக்கும்.
வழக்கமான மூன்று மாத வழங்கீட்டைவிட இம்முறை நான்கு மாத வழங்கீட்டை முதலாளிகள் பெறுவர். இது, நீடித்த நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பணப்புழக்க ஆதரவை வழங்கும் என்று அறிக்கை சுட்டியது.