சிங்கப்பூரில் புதிய உச்சமாக 1,650 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த ஆண்டு பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து பதிவாகியுள்ள ஆக அதிக ஒருநாள் பாதிப்பு இதுவே.
கிருமித்தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக 1,000ஐ கடந்தது.
கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் சமூக அளவில் 1,369 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 277 பேரும் அடங்குவர்.
எஞ்சிய நால்வர், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
இதற்கிடையே, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக முதியவர்கள் மூவர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் தற்போது 1,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 162 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 23 பேர் உள்ளனர்.