கொவிட்-19 தொற்றுச் சூழலில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், தகுதிபெறும் ஏறக்குறைய 160,000 சிங்கப்பூரர்களுக்கு அடுத்த மாதம் $100 மளிகைப்பொருள் பற்றுச்சீட்டு கொடுக்கப்படும்.
சென்ற ஆண்டில் அறிவிக்கப்பட்ட பரிவு, ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி இடம்பெறுகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஓரறை மற்றும் ஈரறை வீடுகளில் வசிக்கும், ஒரு வீட்டிற்குமேல் கொண்டிராத, இந்த ஆண்டு 21 மற்றும் அதற்குமேல் வயதுள்ள சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் அந்தப் பற்றுச்சீட்டு கிடைக்கும் என்று நிதி அமைச்சு நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.
மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுத் திட்டம் மொத்தம் ஏறத்தாழ $63 மில்லியன் மதிப்புள்ள உதவிகளைத் தகுதியுள்ளவர்களுக்கு வழங்குகிறது.
சிங்கப்பூரர்கள் சென்ற ஆண்டு $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர்.
இந்த ஆண்டு பற்றுச்சீட்டுகள் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அடுத்த மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஜயன்ட், ஃபேர்பிரைஸ், பிரைம் பேரங்காடி, ஷெங் சியோங் உள்ளிட்ட பேரங்காடிகளில் மளிகைப்பொருள்களை வாங்கலாம்.
மளிகைப் பற்றுச்சீட்டுகள் சென்ற ஆண்டு வீவக புளோக்குகளில் இருக்கும் அஞ்சல் பெட்டிகளில் சேர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆகையால், இந்த ஆண்டு பற்றுச்சீட்டுகள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும்.