போதிய அளவுக்கு பழங்கள், காய்கறிகள் தாராளமாக இருக்கின்றன. ஆகையால் தேவைப்படுகின்ற அளவுக்கு மட்டுமே பொருட்களை வாங்குங்கள் என்று பயனீட்டாளர்களுக்குப் பேரங்காடிகள் உறுதி தெரிவித்து இருக்கின்றன.
என்டியுசி ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங் குழுமம், டைரி ஃபார்ம் இன்டர்நேஷனல் சில்லறை வர்த்தகக் குழுமம் ஆகியவை இந்த அறிவிப்பை விடுத்தன.
பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதை அடுத்து இவை பயனீட்டாளர்களுக்கு போதிய இருப்பு இருப்பதாக உறுதிகூறி இருக்கின்றன.
பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்தின் ஊழியர்கள், வர்த்தக வருகையாளர்களிடையே கொவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த நிலையத்தைத் துப்புரவு செய்வதற்குத் தோதாக புதன்கிழமை வரை பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் மூடப்பட்டு இருக்கிறது.
தேவை அதிகரிக்கும் என எதிர்பார்த்து தீவு முழுவதும் தனது கடைகளில் பழங்கள், காய்கறிகளை போதிய அளவுக்கு இருப்பு வைத்து இருப்பதாக ஃபேர்பிரைஸ் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
பழங்கள், காய்கறிகளைக் கொள்முதல் செய்வதற்கான பல வழிகளும் எந்த பாதிப்பும் இன்றி திறம்பட செயல்படுகின்றன என்று ஃபேர்பிரைஸ் தெரிவித்தது. ஆகை யால் தேவையானதை மட்டும் வாங்கும்படி பயனீட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
டேரி ஃபார்ம் இன்டர்நேஷனல் குழுமம், போதிய அளவுக்குப் பொருட்கள் கடைகளுக்கு வரு வதை உறுதிப்படுத்த பல வழிகளிலும் தனக்கு விநியோகத் தொடர்பு இருப்பதாக ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தது.
இதேபோலவே, காய்கறிகளும் பழங்களும் குறித்த காலத்தில் வந்து சேர்ந்து கடைகளில் போதிய அளவுக்கு பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்த தாங்கள் கடுமை யாகப் பாடுபட்டு வருவதாக ஷெங் சியாங் குழுமம் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது. இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் பழம் மற்றும் காய்கறி இறக்குமதி, ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் டே கியாம் பெக், பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் மூடப்பட்டு இருப்பதால் சில வழங்கீட்டாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது என்று கூறினார். பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் சிங்கப்பூரின் தென்மேற்குப் பகுதியில் அமைந்து உள்ளது. ஏறத்தாழ 15 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த நிலையம், காய்கறிகள், பழங்கள், உலர்பொருட்களை விநியோகிக்கும் மிக முக்கிய மையமாகத் திகழ்கிறது. சிங்கப்பூருக்கு வரும் பழ இறக்குமதிகளில் ஏறத்தாழ 30 விழுக்காட்டையும் காய்கறிகளில் ஏறத்தாழ 50 விழுக்காட்டையும் அந்த நிலையம் கையாள்வதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவிக்கிறது.