ஏழாவது நாளாக ஆயிரத்திற்குமேல் பதிவான கொவிட்-19 பாதிப்பு

ஏழாவது நாளாக ஆயிரத்திற்குமேல் பதிவான கொவிட்-19 பாதிப்பு

2 mins read
bd0f5da8-d94b-4f4e-acaf-f84343715444
கிருமித்தொற்றால் மேலும் இருவர் மாண்டுபோக, மொத்த உயிரிழப்பு 80ஆக உயர்ந்துவிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று 27ஆம் தேதி திங்கட்கிழமை புதிதாக 1,647 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதனையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 89,539ஆக உயர்ந்தது.

புதிதாக கொரோனா தொற்றியோரில் 1,280 பேர் சமூகத்தில் இருப்போர்; 362 பேர் தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வந்தோர் வகையில் ஐந்து பாதிப்புகள் பதிவாயின.

தொடர்ந்து ஏழாவது நாளாக ஆயிரத்திற்குமேல் கிருமித்தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது.

கொரோனா தொற்றிய 80 வயதுப் பெண்மணியும் 74 வயது ஆடவரும் உயிரிழந்துவிட்டனர். இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டபோதும் அவர்களுக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகளும் இருந்தன.

இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனாவால் மாண்டோர் எண்ணிக்கை 80ஐ எட்டிவிட்டது. கடந்த ஆகஸ்ட்டில் 18 பேரும் இம்மாதத்தில் இதுவரை 25 பேரும் கொரோனா தொற்று காரணமாக மாண்டுபோயினர்.

நேற்று பதிவான சமூக பாதிப்புகளில் 335 பேர், 60 வயதைக் கடந்தவர்கள்.

இதனிடையே, பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனைச் சந்தை கிருமித்தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82ஆக உயர்ந்துவிட்டது. அவர்களில் 76 பேர் சந்தையில் பணியாற்றுவோர், மூவர் வணிக வருகையாளர்கள். எஞ்சிய மூவரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள்.

அதுபோல, பிடோக்கில் உள்ள 'லேர்ன்ஜாய்' துணைப்பாடக் கல்வி நிலைய கிருமித்தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18ஆகவும் ஈசூனில் உள்ள 'மை லிட்டில் கேம்பஸ்' பாலர் பள்ளியில் 47ஆகவும் கூடிவிட்டது.

இப்போது கொவிட்-19 நோயாளிகள் 1,288 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 194 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது.

27 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 30ஆக இருந்தது.

உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோரில் 185 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோர்.

குறிப்புச் சொற்கள்
கொவிட்-19கிருமித்தொற்று