இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூரின் மக்கள்தொகை விகிதம் குறைந்துள்ளது. கொவிட்-19 கொள்ளைநோய் நிலவரம், அதனால் விளைந்த கட்டுப்பாடுகள் ஆகியவை சிங்கப்பூர் மீது ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த ஓர் ஆண்டில் என்றும் இல்லாத சரிவை சிங்கப்பூர் அதன் மக்கள்தொகை எண்ணிக்கையில் சந்தித்துள்ளது. அரசாங்கத்தின் வருடாந்திர மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை இதனைத் தெரிவிக்கிறது.
சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகை ஜூன் மாத நிலவரப்படி, 5.45 மில்லியனுக்குக் குறைந்துள்ளது. 2020ல் இந்த எண்ணிக்கை 5.69 மில்லியனாக இருந்தது. இந்த 4.1% சரிவு, இதுவரை பதிவாகியுள்ள சரிவு விகிதங்களில் ஆக அதிகமானதாகும். இத்தகைய சரிவு, 1950க்குப் பிறகு ஏற்பட்டுள்ளது இது மூன்றாவது முறை என்றும் புள்ளிவிவரத் துறை தரவுகள் குறிப்பிட்டுள்ளன. முன்னதாக, 2020ஆம் ஆண்டில் 0.3% சரிவும் 1986ல் 0.1% சரிவும் மொத்த மக்கள்தொகையில் பதிவாகியிருந்தன.
சிங்கப்பூர்வாசி அல்லாதவரிடையே
அதிகமான சரிவு
சிங்கப்பூரர், நிரந்தரவாசி ஆகியோரை உள்ளடக்கிய சிங்கப்பூரில் வசிக்கும் மக்கள்தொகை சற்று சரிந்திருந்தாலும் சிங்கப்பூர்வாசி அல்லாதவர்களிடையே பதிவான 10.7% சரிவு, இவ்வாண்டின் மக்கள்தொகைச் சரிவுக்குப் பெரும் காரணமாகும். ஜூன் நிலவரப்படி இவர்களின் எண்ணிக்கை 1.47 மில்லியனாக உள்ளது.
கடந்த ஆண்டில் இக்குறிப்பிட்ட பிரிவினரின் விகிதம் 2.1% மட்டுமே குறைந்திருந்தது. இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நிச்சயமற்ற பொருளியல் நிலை காரணமாக வெளிநாட்டினருக்கான வேலைகள் குறைந்ததால் இச்சரிவு பதிவாகியுள்ளதாக அறியப்படுகிறது.
சிங்கப்பூர்வாசி அல்லாத, வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் அனைத்து ஊழியர் பிரிவுகளிலும் இச்சரிவைக் காண முடிந்தது. குறிப்பாக, கட்டுமானம், கடல் பட்டறை மற்றும் செயல்முறைப் பொறியியல் துறைப் பிரிவுகளில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு காணப்பட்டது.
சிங்கப்பூர்வாசி அல்லாதவர்களிடையே இப்பிரிவு ஊழியர்கள் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் ஆவர். சார்ந்திருப்போர் 18%, வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் 16% ஆகியோர் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 'எஸ் பாஸ்' அட்டை வைத்திருப்போர் 11 விழுக்காட்டினர்.
சிங்கப்பூரர் எண்ணிக்கை குறைவு
சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 0.7% குறைந்து, 3.5 மில்லியனில் உள்ளது. நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 6.2% குறைந்து, 0.49 மில்லியன் ஆகியுள்ளது. 1970ஆம் ஆண்டில் தரவுகள் திரட்டப்படத் தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரர், சிங்கப்பூர்வாசி ஆகிய பிரிவுகளில் ஆண்டு அடிப்படையாக மக்கள்தொகை குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஓராண்டு அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்கு வெளிநாடுகளிலேயே தொடர்ந்து மேலும் அதிக சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தங்க நேரிட்டதால் சிங்கப்பூரில் வசிப்போர் மக்கள்தொகையில் சேர்க்கப்படவில்லை.
அத்துடன் பயணக் கட்டுப்பாடுகள் இருவழிப் பயணங்களை முடக்கிய நிலையில், வெளிநாடுகளில் தங்கியுள்ள சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 2011க்குப் பிறகு ஒட்டுமொத்தமாகக் குறைந்தும் உள்ளது. அடிக்கடி பயணம் செய்வோர், அதாவது வழக்கமாக சிங்கப்பூரில் வசித்தாலும் ஆண்டின் பெரும்பாலான நாட்களுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையில் இன்னும் அதிகச் சரிவு காணப்பட்டது.
குடியுரிமை, நிரந்தரவாச உரிமை
பெற்றவர் எண்ணிக்கை குறைவு
குடியுரிமை, நிரந்தரவாச உரிமை ஆகியவற்றை 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே வழங்கப்பட்டன. 21,085 பேருக்கு சிங்கப்பூர் குடியுரிமையும் 27,470 பேருக்கு நிரந்தரவாச உரிமையும் கிடைத்திருந்தன.
கொள்ளைநோயால் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமன்றி 'செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளும்' ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது. உதாரணத்திற்கு, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியதால் நிரந்தரவாச, சிங்கப்பூர் குடியுரிமை கோரி விண்ணப்பித்த ஒரு சிலருக்குக் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கப்பட்டபோதும் நிரந்தரவாசி அல்லது சிங்கப்பூரர் ஆவதற்கான முழு நடைமுறையை அவர்களால் பூர்த்திசெய்ய முடியவில்லை.
"சிங்கப்பூரில் மூப்படைதலும் குறைந்த பிறப்பு விகிதமும் ஏற்படுத்தும் தாக்கத்தை குடிநுழைவு அம்சம் மட்டுப்படுத்த உதவுகிறது. நீண்டகாலத்திற்கு மக்கள்தொகை குறையாமல் இருப்பதையும் அது உறுதிசெய்கிறது. தொடர்ந்து அளவிடப்பட்ட, நிலையான முறையில் குடிநுழைவு வேகம் அமையும்," என்று பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் தேசிய மக்கள்தொகை மற்றும் திறன் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மூப்படைதல் விகிதம் துரிதம்
சிங்கப்பூரர்களிடையே மூப்படையும் சமூகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு அதிக வயதுடையவர்கள் 2011ஆம் ஆண்டில் 10.1 விழுக்காட்டினராக இருந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இவர்கள் 16.8 விழுக்காட்டினராக இருந்தனர். மிக அண்மைய அறிக்கைப்படி, இந்த விகிதம் 17.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளைக் காட்டிலும் மூப்படையும் வேகம் மேலும் துரிதமாகியுள்ளது. அத்துடன் 1946ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களில் அதிகமானோர், 65 வயதுக்குப் பிந்திய பிரிவில் சேர்ந்துள்ளதையும் அறிக்கை குறிப்பிட்டது. இவ்வாறு 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கை 2030ல் கிட்டத்தட்ட 23.8 விழுக்காடாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாறாக, 20 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 2011ல் 65.1 விழுக்காடாக இருந்து, தற்போது 61.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது 2030ஆம் ஆண்டில் ஏறத்தாழ 56 விழுக்காடாக இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் செய்தி - பக்கம் 2ல்