சிங்கப்பூரில் உள்ள தாதிமை இல்லங்கள் கொவிட்-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, அவற்றில் தங்கியுள்ளோர் அனைவருக்கும் கிருமிப் பரிசோதனைகளை நடத்துவதுடன் ஊழியர்களுக்கும் இல்லவாசிகளுக்கும் தனித்தனி பகுதிகளை ஒதுக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அமைப்பு இதை நேற்று தெரிவித்தது.
கிருமித்தொற்றால் ஏற்பட்ட நோய்ச்சிக்கல்கள் காரணமாக மேலும் ஐந்து முதியவர்கள் உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை கூறிய நிலையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மூத்தோருக்கான நிலையங்களில் கொரோனா மேலும் பரவியுள்ளதையும் அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
பிடோக்கில் உள்ள மான் ஃபாட் லாம் எல்டர்லி ஜாய் பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தில் 11 பேருக்கு கிருமி தொற்றியதாக அமைச்சு கூறியிருந்தது.
பாசிர் பாஞ்சாங்கில் உள்ள விண்ட்சர் தாதிமை இல்லத்தில் 39 பேருக்குத் தொற்று ஏற்பட்டதாகவும் உட்லண்ட்சில் உள்ள உட்லண்ட்ஸ் பராமரிப்பு இல்லத்தில் 24 பேருக்குத் தொற்று உண்டானதாகவும் அமைச்சு கூறியது.
இதுவரை வாரம் ஒருமுறை ஊழியர்களுக்குப் பரிசோதனை செய்துவந்த இங்குள்ள தாதிமை இல்லங்கள், இப்போது வாரம் இருமுறை பரிசோதனைகள் மேற்கொள்வதாக ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அமைப்பு நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. அத்துடன், கடந்த 27ஆம் தேதி முதல் அனைத்து இல்ல வாசிகளுக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைப்பு கூறியது. கூடுதல் பரிசோதனைகள், தொற்றை முன்கூட்டியே கண்டறியவும் சமாளிக்கவும் உதவும் என்று அது கூறியது.
அத்துடன், இல்லவாசிகளுக்கும் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களுக்கான பகுதியைவிட்டு வேறு பகுதிக்குச் செல்லக்கூடாது.
கிருமி தொற்றியுள்ள இல்லவாசிகளில் பெரும்பாலானோர் சிகிச்சைக்காகவும் அணுக்கமான கண்காணிப்புக்காகவும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் படுவதாக ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அமைப்பு கூறியது.
தாதிமை இல்லங்களைவிட கூடுதல் மருத்துவ வசதிகளையும் உடல்நிலை சீராக உள்ள, அல்லது இலேசான நோய் அறிகுறிகள் உள்ளவர்களைப் பராமரிக்கும் வசதிகளையும் கொண்ட சமூக சிகிச்சை நிலையங்களுக்குப் பொருத்தமான இல்லவாசிகள் கொண்டு செல்லப்படலாம் என்று அமைப்பு கூறியது.
மேலும், ஒவ்வொரு தாதிமை இல்லத்திலும் பலதரப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தாதிமை இல்லத்தினர், பொதுச் சுகாதாரத் துறையினர், மருத்துவ மனைகள், உள்ளிட்ட தரப்புகளைச் சேர்ந்தோர் இவற்றில் இடம்பெறுகின்றனர். தொற்றைக் கண்டறிந்து, கட்டுப்படுத்தி, கண்காணிக்க இவை கூட்டாக செயல் படுகின்றன.

