கொவிட்-19 கிருமித்தொற்றால் 72க்கும் 90 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் எட்டுப் பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 29) இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அவர்களில் ஆடவர்கள் ஐவரும் மாதர்கள் மூவரும் அடங்குவர். அந்த எண்மரில் அறுவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். ஒருவர் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர். எஞ்சிய ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.
இந்த மாதம் மட்டும் கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 18 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து 10வது நாளாக கொவிட்-19 தொற்றால் மரணங்கள் பதிவாகின. சிங்கப்பூரில் இதுவரை மரணமடைந்தோர் எண்ணிக்கை 93ஆக உள்ளது.
இதற்கிடையே, சிங்கப்பூரில் புதிய உச்சமாக 2,268 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர்களில் சமூக அளவில் 1,810 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 448 பேரும் பாதிக்கப்பட்டனர். எஞ்சிய 10 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ கடந்தது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலிருந்து சமூகத்திற்கு கிருமி பரவியதற்கான ஆதாரம் எதுவும் தென்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.