வீவக வீடுகளின் மறுவிற்பனை விலைதொடர்ந்து ஆறாவது காலாண்டாக ஏற்றம் கண்டுள்ளது. 2013ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் காணப்பட்ட உச்சத்திற்குமேல் 0.7% விலையேற்றம் இருந்ததாக முன்னோடி மதிப்பீட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீவக மறுவிற்பனை விலைகள் அதற்கு முந்திய மூன்று மாதங்களைக் காட்டிலும் 2.7% உயர்ந்துவிட்டன. ஆயினும், இவ்வாண்டின் முதல், இரண்டாம் காலாண்டுகளில் காணப்பட்ட 3% எனும் உயர்வைக் காட்டிலும் இது சற்று குறைவு.
அதேநேரம், ஆண்டு அடிப்படையில் விலைகள் 12.3% ஏறியதாக நேற்று வெளியிடப்பட்ட தரவுகள் குறிப்பிட்டன.
கொவிட்-19 பொருளியல் சரிவிற்கு இடையிலும் மறுவிற்பனை விலைகள் இவ்வாண்டு வலுவாக ஏற்றம் கண்டுள்ளன.
கொள்ளைநோய் காரணமாக ஏற்பட்ட மனிதவளப் பற்றாக்குறை, புதிய வீவக வீடுகளின் கட்டுமானத்தில் நிகழ்ந்த தாமதம், விநியோகத் தொடர் இடையூறுகள், சில கட்டுமான நிறுவனங்கள் தங்களது தொழிலைக் கைவிட வேண்டிய கட்டாயம் போன்றவையும் விலை ஏற்றத்தில் பங்கு வகிக்கின்றன.
இது தொடர்பாக 'இஆர்ஏ ரியால்டி' நிறுவனத்தின் ஆய்வு, ஆலோசனைப் பிரிவின் தலைவர் நிக்கலஸ் மாக் கூறுகையில், "கட்டுமானத் துறையில் நிலவிய சவால்கள், சிரமங்கள் மற்றும் பற்றாக்குறைகள், வீவக மறுவிற்பனை வீடுகளுக்கான தேவையை அதிகரித்துவிட்டன. அதனால், இன்னும் குறுகிய காலத்திற்கு இந்த விலை ஏற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.
அதே வேளையில், மூன்றாம் காலாண்டில் 2.7% ஏறியதன் மூலம் வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் உச்சத்தைத் தொட்டுவிட்டதால் படிப்படியான இறக்கத்தையும் காணமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
"காலாண்டுதோறும் மூன்று விழுக்காடு என்னும் விகிதத்தில் இந்த விலைகள் ஏற்றம் காண்பது நீடித்து நிலைக்கக்கூடிய நிலவரம் அல்ல. காரணம், இதற்கேற்ற அளவில் குடும்பங்களின் சராசரி வருமானமும் இல்லை, உள்ளூர் மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதமும் இல்லை," என்றார் திரு மாக்.
வீவக மறுவிற்பனை விலைகள் இவ்வாண்டில் மட்டும் 8.9 விழுக்காடு உயர்ந்து இருப்பதாக ஹட்டன் ஏஷியா நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் லீ சே டெக் கூறினார்.
மேலும், 2020 இரண்டாம் கால் ஆண்டில் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பிற்கு வந்தபின் 14 விழுக்காடும் 2019 இரண்டாம் காலாண்டில் அடிமட்டத்தைத் தொட்டதிலிருந்து 15 விழுக்காடும் வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் கூடியிருப்பதாகவும் அவர் சுட்டினார்.
இதற்கிடையே, புதிய பிடிஓ வீடுகள் கட்டி முடிக்கப்படும் தேதியில் நிச்சயமற்ற நிலை நீடிப்பதால், அதிகமானோர் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைத் தெரிவு செய்வதாக ஆரஞ்சுடீ அண்ட் டை சொத்துச் சந்தை நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் துறை துணைத் தலைவர் கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.

