ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட 18 மாதத் தடை வரும் நவம்பர் மாதத்தில் அகற்றப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, ஆஸ்திரேலியர்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்படும். அதன்பின், வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வர அனுமதிப்பது குறித்து அறிவிக்கப்படும்.
"ஆஸ்திரேலியர்களுக்கு அவர்களின் வாழ்க்கையைத் திருப்பித் தருவதற்கான நேரம் இது. நாங்கள் உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம், வாழ்வாதாரங்களைக் காத்துள்ளோம். ஆயினும், ஆஸ்திரேலியர்கள் இதற்குமுன் இந்நாட்டில் தாங்கள் வாழ்ந்த வாழ்வை மீட்டெடுப்பதை உறுதிசெய்ய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்," என்று திரு மோரிசன் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு, முக்கிய வர்த்தக, மனிதாபிமானக் காரணங்களுக்காக மட்டுமே அங்கு உள்ளூர்வாசிகள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நாடு திரும்ப அனுமதியுண்டு. அதற்கும் வரம்பு உண்டு. அத்துடன், நாடு திரும்புவோர் சொந்த செலவில் 14 நாள்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நேற்று அறிவிக்கப்பட்ட திட்டத்தின்கீழ், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்ல முடியும். அவர்கள் நாடு திரும்பியபின் ஏழு நாள்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் நாடு திரும்பியபின் தங்களது சொந்த செலவில் 14 நாள்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பை அடுத்து, நவம்பர் 14ஆம் தேதியில் இருந்து அனைத்துலக விமான சேவைகளை மீண்டும் தொடங்க குவான்டஸ் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, சீனாவின் சினோவேக், இந்தியாவின் கொவிஷீல்டு தடுப்பூசிகளை ஆஸ்திரேலியா அங்கீகரித்து இருக்கிறது.
இதன்மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டவர்களும் வெளிநாட்டு மாணவர்களும் ஆஸ்திரேலியா செல்ல வழி பிறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டுப் பயணிகளை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஆஸ்திரேலிய அரசாங்க வட்டாரங்கள் கூறின.