சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவிப்பு
கொவிட்-19 பரிசோதனை, தனிமைப்படுத்தல் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, எளிமையாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
இப்போதுள்ள நடைமுறைகள் தொடர்பில் விரக்தியும் குழப்பமும் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்து உள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
"ஒருசிலர் வழிகாட்டி நெறிமுறைகளைப் புரிந்துகொண்டு, நினைவில் கொள்வர். ஆயினும், சிலருக்கு அது புரியவில்லை எனில் அவர்கள் தங்களது பங்கை ஆற்ற முடியாது, மற்றவர்களுக்கும் உதவ முடியாது," என்றார் திரு ஓங்.
வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பான குழப்பம், அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் ஒத்துக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கு அது உண்மையிலேயே இலேசான நோயாக இருக்கும்போது, சிலர் அதனை 'மிகக் கடுமையான நோயாக' கருதலாம் என்றும் அவர் சொன்னார்.
"எளிமைப்படுத்தப்பட்ட நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம்," என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத்தலைவருமான திரு ஓங் கூறினார்.
சென்ற மாதம் 15ஆம் தேதி கொவிட்-19 நோயாளிகள் தங்களது வீட்டிலேயே குணமடையும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தப் பத்து நாள் தனிமைப்படுத்தல் காலத்தின்போது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அறிவுரை பெற சுகாதார அமைச்சு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று சிலர் கூறியிருந்தனர்.
இதனிடையே, வீட்டில் குணம் அடைதல் திட்டம் தொடர்பில் சில பிரச்சினைகள் இருப்பதை ஒத்துக்கொண்ட கல்வி அமைச்சரும் பணிக்குழுவின் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங், உதவி அழைப்பு எண்களைத் தொடர்புகொள்ளும்போது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒட்டுமொத்த குழுவும் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

