கொவிட்-19 கிருமித்தொற்றால் 55க்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் நால்வர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு சனிக்கிழமை (அக்டோபர் 2) இரவு தெரிவித்தது.
அவர்களில் ஆடவர் ஒருவரும் மாதர்கள் மூவரும் அடங்குவர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். அவர்களுக்குப் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன.
கொவிட்-19 தொற்றால் சிங்கப்பூரில் தொடர்ந்து 13வது நாளாக மரணங்கள் பதிவாகின. தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 107ஆக உள்ளது.
செப்டம்பரில் மட்டும் கொவிட்-19 தொற்றால் 40 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆகஸ்ட்டில் மரண எண்ணிக்கை 18ஆக இருந்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் புதிதாக 2,356 பேருக்குத் தொற்று உறுதியானதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. சமூக அளவில் 1,938 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 412 பேரும் அடங்குவர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த அறுவருக்கும் தொற்று உறுதியானது.
செப்டம்பர் 18ஆம் தேதியிலிருந்து அன்றாட தொற்று பாதிப்பு 1,000க்கும்மேல் பதிவாகி வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 28) முதல் தினசரி பாதிப்பு 2,000க்கும்மேல் பதிவாகி வருகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி, மருத்துவமனைகளில் 1,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 243 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. 31 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர்.