ஓர் உல்லாசக் கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகாரின் பேரில் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உள்ளிட்ட 13 பேரிடம் மும்பை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மும்பையில் இருந்து அந்த உல்லாசக் கப்பல் நேற்று முன்தினம் 800 பயணிகளுடன் புறப்பட்டது.
கப்பலில் ஒரு விருந்தில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட இருப்பதாக மும்பை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலிசாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் குழு அக்கப்பலில் பயணிகள் போல் நுழைந்து சோதனை நடத்தியது.
கப்பலில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்களுக்கு எட்டு இளையர்கள் போதைப்பொருள் விநியோகிப்பது தெரியவந்தது. அவர்களையும் போதைப்பொருள் பயன்படுத்திய சிலரையும் போலிஸ் சுற்றி வளைத்தது. அவர்களில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யனும் ஒருவர் என 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' இணையத்தளம் கூறியது.
மொத்தம் 13 பேரிடம் விசாரணை நடப்பதாகவும் அவர்களிடம் இருந்து பல்வேறு போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மும்பையைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதாக போலிசார் சந்தேகிப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

