கொவிட்-19 தொற்றால் சிங்கப்பூரில் 64க்கும் 90 வயதுக்கும் இடைப்பட்ட மூத்தோர் ஒன்பது பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) இரவு தெரிவித்தது.
அவர்களில் ஆடவர்களும் அறுவரும் மாதர்களும் மூவரும் அடங்குவர். அவர்கள் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளாவர்.
நால்வர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இருவர் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மூவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.
சிங்கப்பூரில் தொடர்ந்து 16வது நாளாக கொவிட்-19 மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 130ஆக உள்ளது.
இதற்கிடையே, சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை புதிதாக 3,486 பேருக்குத் தொற்று உறுதியானது. சமூக அளவில் 2,767 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 713 பேரும் பாதிக்கப்பட்டனர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் ஆறு பேருக்கும் தொற்று உறுதியானது.
சிங்கப்பூரில் முதல்முறையாக அன்றாட கொவிட்-19 பாதிப்பு 3,000ஐ கடந்தது. திங்கட்கிழமையைவிட கூடுதலாக 1,011 பேருக்குத் தொற்று உறுதியானது.
செவ்வாய்க்கிழமை நண்பகல் நிலவரப்படி, மருத்துவமனைகளில் 1,512 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். திங்கட்கிழமை பதிவான எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க, இந்த எண்ணிக்கை 157 அதிகம். அவர்களில் 247 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்பட்டது. 34 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருந்தனர்.