சிங்கப்பூரின் மிக பரபரப்பான இடமான லிட்டில் இந்தியாவின் தேக்கா சந்தையில் தரைத்தளம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. முதல் மாடியில் பலருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிறு வரை அது மூடப்பட்டிருக்கும்.
இரண்டாவது மாடியில் கடைகள் வழக்கம்போல செயல்படுகின்றன.
இது குறித்து பேசிய தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஆல்வின் டான், முதல் மாடி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“உணவங்காடி நிலையங்கள், ஈரச்சந்தைகளுக்கு வருபவர்கள் உணவு உண்பதற்காக முகக்கவசங்களை கழற்றுவதால் தொற்று எளிதில் பரவி விடுகிறது,” என்றார் அவர்.
திரு டானின் மோல்மீன்-கெர்ன்ஹில் வட்டாரத்தில்தான் இப்பகுதி இடம்பெற்றுள்ளது. தானும் தனது குழுவினரும் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடைய கவலைகளை கேட்டறிந்ததாக அவர் சொன்னார்.
“தேக்கா சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களும் தடுப்பூசி போட்டிருந்தால் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. பாதுகாப்பை கருத்தில்கொண்டு தேக்கா சந்தை தற்காலிமாக மூடப்பட்டது,” என்று திரு டான் மேலும் கூறினார்.