முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வரும் நவம்பர் 15ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூர் - தென்கொரியா இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றிப் பயணம் செய்யலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோர் பயணம் செய்ய ஏதுவாக, தென்கொரியாவுடன் சிங்கப்பூர் புதிய தடுப்பூசிப் பயணத்தட உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு நேற்று அறிவித்தது.
தடுப்பூசி பயணத்தடத் திட்டத்தின்கீழ், முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்கள் சாங்கி விமான நிலையத்திற்கும் தென்கொரியாவின் இன்ச்சியோன் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே பயணம் மேற்கொள்ளலாம். அவர்கள் 'பிசிஆர்' பரிசோதனைகள் செய்துகொண்டால் போதுமானது; தனிமைப்படுத்திக்கொள்ளவோ வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் இருக்கவோ தேவையில்லை.
எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்கிறோம், கட்டுப்படுத்தப்பட்ட பயணத் திட்டம் போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் இங்கு வருவதற்குமுன் தாங்கள் புறப்படும் நாட்டில் கடைசி 14 நாள்களும் தங்கியிருந்திருக்க வேண்டும். தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் இயக்கப்படும் பிரத்தியேக விமானங்களிலேயே அவர்கள் பயணம் செய்ய வேண்டும்.அவர்கள் நான்கு முறை 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
முன்னதாக, புருணைக்கும் ஜெர்மனிக்கும் இத்தகைய பயணத் திட்டத்தை சிங்கப்பூர் கடந்த மாதம் அறிவித்திருந்தது.