கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மேலும் 9 நாடுகளுக்குத் தனிமை உத்தரவின்றி சென்று வரலாம். கொவிட்-19 சூழலில் எல்லைகளை மீண்டும் திறந்துவிடுவதில் சிங்கப்பூர் முன்னெடுத்துள்ள மிகப்பெரிய நடவடிக்கை இது.
அதேவேளையில், சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதும் எளிதாக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடம் (விடிஎல்) திட்டத்தின்கீழ், சிங்கப்பூருக்கு வர பயணிகளுக்கு இரண்டு கொவிட்-19 பரிசோதனைகள் மட்டுமே தேவை.
புறப்பாடுக்கு முன்பும் சிங்கப்பூர் வந்திறங்கிய பிறகும் பல்படிய தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) செய்துகொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் பயணிகள் நான்கு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டியுள்ளது.
அக்டோபர் 19 முதல், கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சென்று வரலாம்.
நவம்பர் 15 முதல், விடிஎல் திட்டம் தென்கொரியாவுக்கு நீட்டிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்திருந்தது.