கொவிட்-19 எதிரான அதன் போராட்டத்தில் சவால்மிகுந்த சூழலை சிங்கப்பூர் எதிர்கொண்டு வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு அன்றாட கொவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறை தொடர்ந்து நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. டெல்டா வகை கிருமிப் பரவல் மெதுவடைந்திருந்தாலும் தொற்று இன்னும் நிற்கவில்லை.
எனினும், ஒவ்வொரு நாளும் கடந்து செல்கையில், சிங்கப்பூர் வலுவடைந்தும் மீள்திறனுடனும் இருந்து வருகிறது. கொவிட்-19 கிருமியுடன் வாழப் பழக்கிக்கொள்ள நாடு தயாராகி வருகிறது.
இந்தப் ‘புதிய இயல்புநிலை’யை அடைய மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 9) கூறினார்.
கொவிட்-19 நிலவரம் குறித்து இன்று நண்பகல் நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய கொவிட்-19 தொற்று அதிகரிப்பு ஒரு கட்டத்தில் மெதுவடைந்துவிடும். ஏறக்குறைய ஒரு மாதத்திற்குள் தொற்றுப் பாதிப்பு குறையக்கூடும் என்று பிரதமர் லீ நம்பிக்கை தெரிவித்தார்.