கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எதிர்வரும் வாரங்களில் மேலும் ஒன்பது நாடுகளுக்குத் தனிமை உத்தரவின்றி சென்றுவர முடியும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ் (விடிஎல்), அக்டோபர் 19 முதல், கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சென்று வரலாம். சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் அவர்கள் இங்கு தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை.
நவம்பர் 15 முதல், விடிஎல் திட்டம் தென்கொரியாவுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் இதுவரை மொத்தம் 11 நாடுகளுடன் இந்த இருதரப்பு பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது. கடந்த மாதம் ஜெர்மனியும் புருணையும் இத்திட்டத்தின்கீழ் வந்தன.
இத்திட்டத்தின்கீழ் பயணம் மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்:
1. தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமா?
பயணிகள் முழுயாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மின்னிலக்க முறை மூலம் சரிபார்க்கத்தக்க தடுப்பூசிச் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
சிங்கப்பூரிலோ அல்லது விடிஎல் திட்டத்தின்கீழ் வரும் நாடுகளிலோ அவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர, குறுகியகால வருகையாளர்களும் நீண்டகால அனுமதி அட்டை உடையோரும் ‘தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண அனுமதி’க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
எனினும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் இந்தப் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
2. விண்ணப்பங்கள் எப்போது தொடங்குகின்றன?
தென்கொரியாவைத் தவிர்த்து, மற்ற எட்டு நாடுகளிலிருந்து அக்டோபர் 19ஆம் தேதி முதல் சிங்கப்பூர் வருவதற்கான விண்ணப்பங்கள் வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) காலை 10 மணிக்கு தொடங்குகின்றன.
நவம்பர் 15ஆம் தேதி முதல், தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.
ஜெர்மனி மற்றும் புருணையிலிருந்து வருவோர், கடந்த மாதத்திலிருந்து விடிஎல் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடிகிறது.
3. தடுப்பூசி போட்டிராத சிறுவர்கள் பயணம் செய்யலாமா?
இல்லை. விடிஎல் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். எனவே, 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் உட்பட தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் இத்திட்டத்தின்கீழ் பயணம் செய்ய முடியாது.
விடிஎல் திட்டத்தின்கீழ் வராத விமானங்களில் அத்தகையோர் பயணம் செய்யலாம். ஆனால், தனிமைப்படுத்திக்கொள்ளும் விதிகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவர்.
4. எனது பயண வரலாற்றுக்கான விதிமுறைகள் என்னென்ன?
அக்டோபர் 19 முதல், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு கடைசி 14 நாள்களில் பயணிகள் விடிஎல் திட்டதின்கீழ் வரும் நாடுகளில் இருந்திருக்க வேண்டும்.
அப்படி அந்தப் பயணி கடைசி 14 நாள்களில் சிங்கப்பூரில் இருந்திருந்தால், அந்த 14 நாள் பயண வரலாறு விதியைப் பூர்த்திசெய்ய, அவர் சிங்கப்பூரில் இருந்த நாள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
5. நான் எத்தனை கொவிட்-19 பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்?
விடிஎல் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கான பரிசோதனை விதிமுறை அக்டோபர் 19 முதல் எளிமையாக்கப்படுகிறது. புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பும் சிங்கப்பூர் வந்திறங்கியவுடனும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் மூன்றாவது மற்றும் ஏழாவது நாளில் பயணிகள் கொவிட்-19 பல்படிய தொடர்வினை (பிசிஆர்) பரிசோதனையைச் செய்ய வேண்டியதில்லை.
6. எந்தெந்த விமானங்களில் நான் பயணம் செய்யலாம்?
விடிஎல் திட்டத்தின்கீழ் இயங்கும் விமானங்களில் பயணம் செய்ய வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) குழுமம், தனது விடிஎல் கட்டமைப்பை 14 நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக இன்று சனிக்கிழமை தெரிவித்தது. எதிர்வரும் வாரங்களில் கூடுதல் நகரங்கள் இதில் சேர்க்கப்படலாம்.
7. வேறு என்னென்ன விதிமுறைகள் உள்ளன?
சிங்கப்பூருக்கு வர, குறுகியகால வருகையாளர்கள் விசா பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டும். சிங்கப்பூருக்கு வர ஒப்புதல் பெற்ற பிறகும் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பும் விசா பெற அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அவர்கள் பயணக் காப்புறுதியையும் வாங்க வேண்டும்.
சிங்கப்பூரில் இருக்கும் காலத்தில் வருகையாளர்கள் ‘டிரேஸ்டுகெதர்’ செயலி அல்லது கருவியைப் பயன்படுத்த வேண்டும்.