தொடர்புகளை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற பொதுவான விருப்பத்தை சிங்கப்பூரும் மலேசியாவும் கொண்டுள்ளன என்றும் எல்லைகளை விரைவில் திறப்பது தொடர்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடங்கும் என்றும் நம்புவதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
எல்லைகளைத் திறப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் அதற்கேற்ப சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றியமைக்கும் என்றும் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்கும் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனும் தெரிவித்தனர்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இன்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது, ஜோகூர் உடனான தனது எல்லைக் கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்வது பற்றி சிங்கப்பூர் பரிசீலிக்குமா என்று பெர்னாமா செய்தியாளர் கேட்டதற்கு, அமைச்சர்கள் இவ்வாறு பதிலளித்தனர்.
கொவிட்-19 பரவலின் அடிப்படையில் நாடுகளை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ள சிங்கப்பூர், அதன் அடிப்படையில் வேறுபட்ட எல்லைக் கட்டுப்பாடுகளையும் வகுத்துள்ளது.
அதன்படி, கொரோனா பரவல் அபாயம் மிக அதிகமாக உள்ள நாடுகளுக்கான நான்காம் பிரிவில் மலேசியா இப்போது இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கொரோனா நிலவரம், தடுப்பூசி விகிதத்தைப் பொறுத்து இரு வாரங்களுக்கு ஒருமுறை அப்பட்டியல் மறுஆய்வு செய்யப்படுவதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
“மலேசியாவில் நிலைமை மேம்படும் பட்சத்தில், காலப்போக்கில், அந்நாடு இடம்பெற்றுள்ள பிரிவும் மாறும் என்பதில் ஐயமில்லை,” என்றார் அவர்.
கொரோனா தொற்று அபாயத்தைப் பொறுத்தமட்டில், விமானப் போக்குவரத்திலிருந்து தரைவழிப் போக்குவரத்து வேறுபட்டது எனக் குறிப்பிட்ட அமைச்சர் வோங், ஆகையால் அவற்றைத் தனித்தனியாகவே பார்க்க வேண்டும் என்று சொன்னார்.
இப்போது 100,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் தவித்துவருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்போதைக்கு, காலமுறைப் பயண ஏற்பாட்டுத் (பிசிஏ) திட்டத்தின்கீழும் இறப்பு அல்லது கடும் உடல்நலக் குறைபாடு போன்ற அவசரநிலைக்காகவும் சிங்கப்பூர்-மலேசியா இடையே பயணம் செய்ய முடியும்.