கொவிட்-19 சூழலுடன் வாழத் தேவையான உத்திமுறைகளை சிங்கப்பூர் தொடர்ந்து கையாள வேண்டும் எனப் பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வேளையில்,
மக்களின் மனபோக்கில் மாற்றம் ஏற்படுவது மிகவும் முக்கியம் என்று அவர் நேற்று தெரிவித்தார். கொவிட்-19 கிருமியை
அலட்சியப்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்ட திரு லீ, அதே சமயத்தில் பயத்தால் முடங்கிவிடாமல் வாழ்க்கையைத் தொடர வேண்டும் எனக் கூறினார்.
கொவிட்-19 சூழலில் சிங்கப்பூர் மேற்கொள்ள இருக்கும் பாதையை சிங்கப்பூரர்களுக்குத் தெரிவிக்க பிரதமர் லீ நேற்று நண்பகல் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவரது உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கொவிட்-19 கிருமிப் பரவல் அறவே இல்லாத நிலை இனி சாத்தியமில்லை என்று திரு லீ தெரிவித்தார். மாறாக, நடை
முறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைக் கூடுமான வரை தொடர வேண்டும் என்றார் அவர்.
முழுமையாகத் தடுப்பூசி
போட்டுக்கொண்ட பெரும்பாலானோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று, சாதாரண சளி, காய்ச்
சலைப்போல சிகிச்சை அளிக்கக்கூடிய நோயாகிவிட்டதாக அவர் கூறினார். இருப்பினும், சிங்கப்பூரர்களிடையே நிலவும் பதற்றம், விரக்தி தமக்குப் புரிவதாக அவர் தெரிவித்தார். உத்திமுறை மாற்றம் குறித்து பிரதமர் லீ விளக்கம் அளித்தார். கொவிட்-19 டெல்டா கிருமி வகையின் அச்சுறுத்தல் நிலைமையை மாற்றிவிட்டதாக அவர் கூறினார். முடக்கநிலை, பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அதை முற்றிலும் தடுத்துவிட முடியாது என்றார் அவர். இந்த யதார்த்த நிலையைப் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதை அவர் சுட்டினார். பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் அதன் விளைவாக அந்நோய்க்கு எதிராக அவர்களது எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறினார். எனவே,
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது மேலும் பலருக்குக்
கிருமித்தொற்று ஏற்படுவது இயல்பு என்றார் அவர். முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கும் கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டால் வர்த்தகங்கள் பாதிக்கப்படும் என்றும் ஊழியர்கள் வேலை இழக்கக்கூடும் என்றும் திரு லீ தெரிவித்தார். மேலும் சிறுவர்கள் தங்கள் பாலர், இளம் பருவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் போய்விடும் என்று
பிரதமர் லீ அக்கறை தெரிவித்தார். நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டு பொருளியல் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். எல்லைகள் மூடப்படும்போது வெளிநாடுகளில் தங்கும் குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க முடியாமல் சிங்கப்பூரர்கள் பலர் தவிப்பதாக அவர் கூறினார். இத்தகைய நிலை சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோரை மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாதிக்கும் என்றார் திரு லீ.