மலேசியாவில் இன்று முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்டோர் இனி மாநிலங்களுக்கு இடையிலும் வெளிநாடுகளுக்கும் செல்ல அனுமதிக்கப்படுவர். அந்நாட்டில் பெரியவர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி இயக்கத்தின் இலக்கு வெற்றி அடைந்தது குறித்து நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், கிருமித்தொற்று அதிகரித்தாலும், படிப்படியாக அகற்றப்படும் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வராது எனத் தெரிவித்தார்.
"வாழ்க்கையும் வர்த்தகங்களும் இயல்புநிலையில் தொடரும்," என அவர் அனைவருக்கும் உறுதியளித்தார்.
"தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்தாலும் குறிப்பிட்ட அம்சங்களில்தான் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். விதிமுறைகளின்படி செயல்பட்டால் முடக்கநிலை இருக்காது என்பதை உறுதிப்படுத்தலாம்," என்று அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக்கொண்ட மலேசியர்களும் அவர்களது பிள்ளைகளும் உள்நாட்டிலேயே பிற மாநிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். வெளிநாடுகளுக்குச் செல்லவும் அனுமதி உண்டு. எனினும், மலேசியாவுக்குள் வருவோர் 14 நாள் கட்டாய தனிமை உத்தரவில் இருக்க வேண்டும். முன்னதாக, பணி அல்லது படிப்பு போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் 'மைட்ராவல்பாஸ்' திட்டம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
வெளிநாட்டுப் பயணிகளை அனுமதிப்பதற்கு முன்னர் அந்தந்த நாடுகளில் தொற்று எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, குணமடைதல் விகிதம் போன்ற பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார். பயணங்களைத் தொடங்குவதற்கு முன்னர் சுயபரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். சுயபரிசோதனையை மலேசியா கட்டாயமாக்கவில்லை.