சிங்கப்பூரில் தொடர்ந்து ஐந்து நாள்களாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரை கொவிட்-19 தொற்றிய நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அது மூவாயிரத்திற்கும் குறைவாகப் பதிவானது.
சமூகத்தில் 2,176 பேர், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 631 பேர், வெளிநாட்டில் இருந்து வந்த இருவர் என நேற்று 2,809 பேர்க்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது நேற்று முன்தினத்தைக் காட்டிலும் 894 குறைவு.
இருப்பினும், தொடர்ந்து 21வது நாளாக கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. நேற்று மேலும் ஒன்பது பேர் இறந்துபோயினர்.
இதனையடுத்து, மொத்த பாதிப்பு 126,966 ஆகவும் உயிரிழப்பு 162 ஆகவும் உயர்ந்தன.
கடந்த 28 நாள்களில் உள்ளூரில் கொரோனா தொற்றியோரில் 98.5 விழுக்காட்டினர்க்கு அறிகுறிகளே இல்லை அல்லது இலேசான அறிகுறிகள் தென்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் 1.2 விழுக்காட்டினர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்பட்டது; 0.1 விழுக்காட்டினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
செயற்கை உயிர்வாயு தேவைப்பட்டோரிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தோரிலும் 48.8 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் என்றும் 51.2 விழுக்காட்டினர் பகுதியளவு தடுப்பூசி போட்டுக்கொண்டோர் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தோ பாயோவில் உள்ள யுனைடெட் மருத்துவப் பராமரிப்பு நிலையம், ஜூரோங்கில் உள்ள அஸ்ப்ரி-வெஸ்ட்லைட் பாப்பான் விடுதி ஆகிய இரு பெரிய கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.