பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவேக்சின்' தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்காக இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் 2 முதல் 18 வயதுப் பிரிவினருக்கு 'கோவேக்சின்' தடுப்பூசியைச் செலுத்தி, பரிசோதிக்கப்பட்டதற்கான தரவுகளை மறுஆய்வு செய்தபின், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 950 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைப் பெரியவர்களுக்குப் போட்டுள்ள நிலையில், கொரோனா கிருமிக்கு எதிரான பாதுகாப்பைச் சிறுவர்களுக்கும் அளித்திடுவதில் தற்போது இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
வீரியமற்ற கொரோனா கிருமியையும் அதிகப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்ட 'கோவேக்சின்', இந்தியாவில் பெரியவர்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று தடுப்பூசி வகைகளில் ஒன்றாகும்.
டெல்டா உருமாறிய கிருமியால் ஜூன் மாதத்தில் இரண்டாவது கிருமி அலை இந்தியாவை வருத்த, சிறார்களிடத்தில் 'கோவேக்சின்' முன்னோட்டத் திட்டத்தை பாரத் பயோடெக் தொடங்கியது. அதில் கண்டறிந்ததை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பும் நிபுணர்க் குழுவும் மறுஆய்வு செய்து தங்கள் தரப்பு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.