எட்டு நாடுகளைச் சேர்ந்த 2,409 பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி

எட்டு நாடுகளைச் சேர்ந்த 2,409 பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி

1 mins read
527b16b4-644a-4fe3-80e0-5df5fabc0bdf
-
Google News Preferred Icon

தனிமைப்படுத்திக்கொள்ள தேவை இல்லாமல் சிங்கப்பூர் வர அனுமதிக்கும் திட்டத்தின்கீழ், 2,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) தொடங்கியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடம் என்று அழைக்கப்படும் அந்தத் திட்டத்தின்கீழ் (Vaccinated Travel Lane) 2,409 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களில் 724 குறுகியகால வருகையாளர்களும் 1,685 நீண்டகால அனுமதி உடையோரும் அடங்குவர்.

இவர்களில், பிரிட்டனைச் சேர்ந்தவர்களே ஆகப்பெரிய குழுவினர். நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) இரவு 11.59 மணி நிலவரப்படி, பிரிட்டனைச் சேர்ந்த 976 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பிரான்சை சேர்ந்த 537 பேரின் விண்ணப்பங்களும் அமெரிக்காவைச் சேர்ந்த 440 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று புதன்கிழமை (அக்டோபர் 13) தெரிவித்தது.

கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கின. அக்டோபர் 19ஆம் தேதியிலிருந்து அவர்கள் சிங்கப்பூர் வரலாம்.