லாரி ஓட்டுநர் முறையாகக் கவனிக்கத் தவறியதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இரு உயிர்கள் பலியானதாக நேற்று நீதிமன்றத்தில் மரண விசாரணை அதிகாரி கூறினார்.
சாலை ஓரத்தில் டிப்பர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி ஐந்து லாரி நீளத்திற்குப் பின்னால் இருந்தது.
உரிய நேரத்தில் கவனிக்கத் தவறியதன் காரணமாக டிப்பர் லாரியின் பின்பக்கத்தில் ஊழியர்களின் லாரி மோதியது. இவ்வாண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவ்விபத்து நிகழ்ந்தது. லாரியின் பின்னால் அமர்ந்திருந்த 17 ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பல்வேறு காயங்கள் காரணமாக இரு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
லாரிக்குள் சிக்கிக்கொண்ட பங்ளாதேஷைச் சேர்ந்த டோஃபஸல் ஹுசைன், 33, மீட்கப்பட்டு இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மாண்டார்.
இந்தியாவைச் சேர்ந்த சுகுணன் சுதீஷ்மன், 28, என்னும் ஊழியர் தேசிய பல்லைக்கழக மருத்துவமனையில் உயிரிழந்ததார்.
நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் கலந்து கொண்ட மூத்த புலன்விசாரணை அதிகாரி அஸிஸ் தஹார், லாரியை ஓட்டிச் சென்ற 36 வயது ஓட்டுநர் ஜாலான் பஹாரில் தமது அதிகாரியை ஏற்றிச் செல்வதற்காக தீவு விரைவுச் சாலையில் சென்றதாகக் கூறினார். ஓட்டுநரின் பெயர் விவரம் வெளியிடப் படவில்லை.