இந்தியா செல்ல விரும்பும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!
இந்தியா 500,000 சுற்றுப்பயணிகளுக்கு இலவசமாக விசா வழங்கவுள்ளது. விசா பெற https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html என்ற இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இந்த இலவச விசா திட்டம் 2022 மார்ச் 31 வரை அல்லது 500,000 என்ற எண்ணிக்கையை எட்டும்வரை நடப்பில் இருக்கும். இதனால் இந்திய அரசுக்கு ரூ.100 கோடி செலவாகும் என்று உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒருவர் ஒருமுறை மட்டுமே இத்திட்டத்தின்கீழ் விசா பெறலாம்.
“விசா வழங்குவது மீண்டும் தொடங்கியதும் 500,000 வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும்,” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூன் மாதமே அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் சென்ற மாதம் இந்த இலவச விசா திட்டம் குறித்துப் பேசியிருந்தார்.
கொவிட்-19 பரவலால் முடங்கிப்போயிருந்த பயணத்துறைக்குப் புத்துயிர் ஊட்ட இந்தியா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கதவுகளை மூடியிருந்த இந்தியா, தனது கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.
பிரத்தியேக விமானம் (Chartered flight) வழியாக இன்று முதல் (அக்டோபர் 15) இந்தியா செல்லலாம், விசா பெறலாம். மற்றவர்கள் நவம்பர் 15ஆம் தேதி முதல் இந்தியா செல்ல முடியும்.