சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்குவோரை வருகைக்கூடத்தில் வரவேற்று அழைத்து வரும் வாய்ப்பு ஐந்து மாதங்களுக்கு பிறகு நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் மீண்டும் இப்போது கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் ஓர் ஏற்பாடு அக்டோபர் 19 முதல் நடப்புக்கு வருகிறது. இதற்கு முன்னதாக சாங்கி விமான நிலையத்தில் விதிகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன.
விமான நிலையம் தொடர்பான தொற்றுக் குழுமம் பெரிய அளவில் உருவானதை அடுத்து, பயணிகளை வரவேற்று அழைத்து வரும் நடைமுறை கடந்த மே மாதம் முதல் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கொவிட்-19 ஆபத்து குறைவாக உள்ள நாடுகள், வட்டாரங்களில் இருந்து வருகின்ற பயணிகளை வரவேற்று அழைத்துவர குடும்பத்தாரும் நண்பர்களும் நிபுணத்துவ சேவையினரும் இப்போது அனுமதிக்கப்படுவர் என்று சாங்கி விமான நிலையம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
ஹோட்டல்கள், போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் நிபுணத்துவ சேவையாளர்களில் அடங்குவர்.
வருகைக்கூடத்தில் தரையிறங்கும் பயணிகளை அழைத்து வர இத்தகைய நிபுணத்துவ சேவைகளுக்கு செப்டம்பர் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கிய பிறகுதான் வருகைக்கூடத்தில் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அனுமதி கிடைக்கும்.
வருகையாளரை வரவேற்க ஒருவருக்குத்தான் அனுமதி உண்டு. மக்கள் தங்கள் வாகனங்களில் முனையம் 1 மற்றும் முனையம் 3ல் இருந்து பயணிகளை அழைத்துச் செல்லலாம் என்றும் சாங்கி விமான நிலையம் தெரிவித்துள்ளது.